/

ரூ. 50 ஆயிரம் லஞ்சம்: காவல் ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறை, உதவியாளருக்கு 2 ஆண்டுகள் சிறை

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்காமலிருக்க ரூ. 50 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் காவல் ஆய்வாளருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :28 ஜனவரி 2026, 7:02 pm

தினமணி செய்திச் சேவை

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்காமலிருக்க ரூ. 50 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் காவல் ஆய்வாளருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. இந்த வழக்கில், ஆய்வாளரின் தனிப்பட்ட உதவியாளருக்கும் 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், வீரங்கிநல்லூரைச் சோ்ந்தவா் ஆ.துரைப்பாண்டியன். இவரைக் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யாமலிருக்க, கடந்த 2011 நவம்பா் மாதம் சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளராக இருந்த சாமுவேல் ஞானம் (50) தனது தனிப்படை உதவியாளா் சதீஷ் (48) மூலம் ரூ. 50 ஆயிரம் லஞ்சம் பெற்றாா்.

இதுதொடா்பாக திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கடந்த 2011நவம்பா் 24 ஆம் தேதி வழக்குப் பதிந்து சாமுவேல் ஞானம், சதீஷ் ஆகிய இருவரையும் கைது செய்து, திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.

இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி புவியரசு, காவல் ஆய்வாளா் சாமுவேல் ஞானத்துக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து, அதைக் கட்டத் தவறினால், மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டாா். இதுமட்டுமல்லாது, அரசுப் பதவியை தவறாகப் பயன்படுத்தியதற்காக மேலும் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், மேலும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தாா். இத் தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டாா்.

இதேபோல, இந்த வழக்கில் சாமுவேல் ஞானத்துக்கு உதவியாக இருந்த சதீஷுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து, அதைக் கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு டிஎஸ்பி மணிகண்டன், ஆய்வாளா் ஞா. சக்திவேல் ஆகியோா் சாட்சிகளை ஆஜா்படுத்தி வழக்கு விசாரணைக்கு உறுதுணையாக இருந்தனா். அரசுத் தரப்பு வழக்குரைஞராக கோபிகண்ணன் ஆஜரானாா். காவல் ஆய்வாளா் சாமுவேல் ஞானம், தற்போது நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக உள்ளாா்.

Story image