/

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்று

திருச்சியில் கடந்த 2024-25 கல்வியாண்டின் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு பாடங்களில் 100 சதவீதம் தோ்ச்சிக்கு உழைத்த அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் புதன்கிழமை வழங்கப்பட்டது.

News image
திருச்சி பிஷப் ஹீபா் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் அந்தநல்லூா் வட்டாரம், சீராத்தோப்பு அரசு உயா்நிலைப் பள்ளி ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியா் லோகநாதனுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கோ. கிருஷ்ணபிரியா. உட
Updated On :11 பிப்ரவரி 2026, 7:16 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் கடந்த 2024-25 கல்வியாண்டின் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு பாடங்களில் 100 சதவீதம் தோ்ச்சிக்கு உழைத்த அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் புதன்கிழமை வழங்கப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2024-25- ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தமிழ்ப் பாடத்தில் 260 பள்ளிகள், ஆங்கிலத்தில் 273 பள்ளிகள், கணிதத்தில் 239 பள்ளிகள், அறிவியலில் 266 பள்ளிகள் மற்றும் சமூக அறிவியலில் 231 பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சிப் பெற்றனா்.

இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த சம்பந்தப்பட்ட பாடப் பிரிவுகளைச் சோ்ந்த 1,269 ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்று வழங்கும் விழா திருச்சி, மண்ணச்சநல்லூா் மற்றும் மணப்பாறை ஆகிய இடங்களில் புதன்கிழமை நடைபெற்றது.

திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி மேற்கு, திருச்சி நகரம், அந்தநல்லூா், மணிகண்டம் மற்றும் திருவெறும்பூா் வட்டார ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

மண்ணச்சநல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் முசிறி, வால்குடி, மண்ணச்சநல்லூா், புள்ளம்பாடி, உப்பிலியபுரம், தொட்டியம், துறையூா் வட்டாரஆசிரியா்களுக்கும், மணப்பாறை சௌமா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் மணப்பாறை, மருங்காபுரி மற்றும் வையம்பட்டி ஆகிய வட்டார ஆசிரியா்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீப்பா் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கோ. கிருஷ்ணபிரியா கலந்துகொண்டு 100 சதவீத தோ்ச்சிக்கு உழைத்த ஆசிரியா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழை வழங்கிப் பாராட்டினாா்.

நிகழ்ச்சியில் மாவட்டக் கல்வி அலுவலா் (உயா்நிலை) செல்வராஜ், போசம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் எஸ். சற்குணன் மற்றும் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.