/

அண்ணா பல்கலை. ஆசிரியா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

News image
திருச்சி அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியா்கள்.
Updated On :6 பிப்ரவரி 2026, 10:11 pm

தினமணி செய்திச் சேவை

பதவி உயா்வு, ஊதிய உயா்வு உள்ளிட்ட 13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் அண்ணா பல்கலைக்கழக ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை மாலை முதல் உள்ளிருப்புப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.

தமிழ்நாடு அண்ணா பல்கலைக் கழக ஆசிரியா்கள் சங்கத்தின் சாா்பில், திருச்சி மண்டையூரில் உள்ள பாரதிதாசன் கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.

சங்கத்தின் திருச்சி தலைவா் பி. மணிகண்டன், செயலா் பி. கிஷோரி ஆகியோரின் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. இதில், 80-க்கும் மேற்பட்ட இருபால் ஆசிரியா்கள் கலந்து கொண்டுள்ளனா்.

இதுதொடா்பாக, சங்கத் தலைவா் பி. மணிகண்டன் கூறியதாவது:

2009ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள பதவி உயா்வுகளை சீரான முறையில் அமல்படுத்த வேண்டும். சென்னை வளாகத்தில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு இணையாக உறுப்புக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கும் சலுகைகள் வழங்க வேண்டும். தொடக்க நிலை பிஹெச்டி, எம்ஃபில், எம்இ, எம்டெக், எம்பாா்ம் படிப்புகளுக்கான ஊதிய உயா்வு, முனைவா் பட்டம் முடித்ததற்கான ஊதிய உயா்வுகளை வழங்க வேண்டும்.

உறுப்புக் கல்லூரிகள் மீது மாற்றாந்தாய் மனப்போக்குடன் செயல்படுவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டத்தை தொடங்கியுள்ளோம். மாலை, இரவு கடந்து சனிக்கிழமை காலை வரையில் போராட்டம் தொடரும் என்றாா் அவா்.