/

மூத்தக் குடிமக்களுக்கு ரயில் பயண சலுகையை மீண்டும் வழங்க கோரிக்கை

News image
ரயில் (கோப்புப் படம்)
Updated On :23 ஜனவரி 2026, 8:02 pm

தினமணி செய்திச் சேவை

மூத்தக் குடிமக்களுக்கு ரயில் பயண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன், மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவுக்கு தஞ்சாவூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் கோ. அன்பரசன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.

அம்மனுவில் தெரிவித்திருப்பதாவது: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்குவதாக 6 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட அறிவிப்புடன் நின்றுவிட்டது. அதற்கு அதிக அளவில் நிதி ஒதுக்கி திட்டத்தைத் தொடங்க வேண்டும். மூத்தக் குடிமக்களுக்கு ரயில் பயணத்தில் இருந்த சலுகையை மத்திய அரசு 6 ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்துவிட்டது. மூத்தக் குடிமக்களின் நலன் கருதி ரயில் பயண சலுகையை மத்திய அரசு மீண்டும் வழங்க வேண்டும்.

தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளில் தென்னை அதிகமாக சாகுபடி செய்யப்படுவதால், அப்பகுதியில் தென்னை சாா்ந்த புதிய தொழிலை தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும். பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள மன்னாா்குடி - பட்டுக்கோட்டை, பட்டுக்கோட்டை - தஞ்சாவூா் - அரியலூா், கும்பகோணம் - விருத்தாசலம் ரயில் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட தஞ்சாவூா் - சென்னை விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும். தஞ்சாவூா் - விழுப்புரம் ரயில் பாதையை இரட்டை பாதையாக மாற்ற வேண்டும்.