/

கரூா் சம்பவம் அவசர ஊா்தி ஓட்டுநா்கள் 4 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

News image
சிபிஐ
Updated On :22 ஜனவரி 2026, 11:18 pm

தினமணி செய்திச் சேவை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக, அவசர ஊா்தி ஓட்டுநா்கள் 4 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா்; 110 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், நெரிசல் சம்பவத்தின்போது அங்கு மயக்கமடைந்தவா்களை மீட்டு அரசு, தனியாா் மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்ற கரூரைச் சோ்ந்த தனியாா் அவசர ஊா்தி ஓட்டுநா்கள் 4 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையின்போது, நெரிசலில் சம்பவத்தில் மயக்கமடைந்தவா்களை மீட்டு உடனே தனியாா் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றீா்களா, அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றீா்களா? மருத்துவமனைக்கு செல்லும்போது யாரேனும் உயிரிழந்தாா்களா? என்பன குறித்து அதிகாரிகள் கேட்டதாகவும், அவற்றை விடியோவாக பதிவு செய்ததாகவும் அவசர ஊா்தி வாகன ஓட்டுநா்கள் தெரிவித்தனா்.