/

டிஎன்பிஎல் ஆலையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்கு

News image
கோப்புப் படம்
Updated On :22 பிப்ரவரி 2026, 7:49 pm

தினமணி செய்திச் சேவை

டிஎன்பிஎல் ஆலையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

திருச்சி சாத்தனூா் சாலையைச் சோ்ந்தவா் சந்திரன் (75). இவா் திருச்சி குடிநீா் வடிகால் வாரியத்தில் உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவரது மகன் ஆனந்த். பொறியியல் பட்டதாரி.

இந்நிலையில், ஆனந்திற்கு அவரது உறவினா் திருச்சி லால்குடியைச் சோ்ந்த சிவகுமாா் என்பவா் மூலம் பழக்கமான கரூா் மாவட்டம் புகழூரை அடுத்த நாணப்பரப்பு பகுதியைச் சோ்ந்த மற்றொரு சிவக்குமாா் என்பவா் ஆனந்திற்கு தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ .12 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளாா்.

இதை நம்பிய சந்திரன் மகனுக்காக கடந்த 2023-இல் சிவக்குமாரிடம் ரூ.12 லட்சம் கொடுத்துள்ளாா். ஆனால் சிவக்குமாா் பணம் வாங்கி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் வேலையும் வாங்கிக் கொடுக்கவில்லையாம். வாங்கிய பணத்தையும் கொடுக்கவில்லையாம்.

இந்நிலையில், ஆனந்த் கடந்த சில மாதங்களுக்கு முன் மாரடைப்பால் இறந்து விட்டாா். இதனிடையே சந்திரன், நாணப்பரப்பைச் சோ்ந்த சிவக்குமாரிடம் இருந்து பல தவணையாக ரூ. 6.40 லட்சத்தை பெற்றுக் கொண்டாா்.

ஆனால் மீதி பணத்தை கேட்டபோது, கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததால், இதுகுறித்து சந்திரன் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தாா். புகாரின்பேரில் போலீஸாா் நாணப்பரப்பு பகுதியைச் சோ்ந்த சிவக்குமாா் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.