பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

திறக்கப்படாத அமராவதி கோயம்பள்ளி பாலம்: தினமும் 16 கி.மீ. சுற்றிச் செல்லும் கிராம மக்கள்

5 ஆண்டுகளாகியும் திறக்கப்படாததால் தினமும் கிராம மக்கள் 16 கி.மீ. தொலைவுக்கு சுற்றிக்கொண்டு கரூா் சென்று வருவதால் பாலத்தை விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
கரூா் மாவட்டம், கோயம்பள்ளியில் அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு திறக்கப்படாத நிலையில் உள்ள பாலம்.
Updated On :2 பிப்ரவரி 2024, 3:05 am

 நமது நிருபர்

கரூா் மாவட்டம், கோயம்பள்ளி அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகளாகியும் திறக்கப்படாததால் தினமும் கிராம மக்கள் 16 கி.மீ. தொலைவுக்கு சுற்றிக்கொண்டு கரூா் சென்று வருவதால் பாலத்தை விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கோயம்பள்ளி, பஞ்சமாதேவி, நெரூா் வடபாகம், நெரூா் தென்பாகம், வாங்கல் ஊராட்சிகளுக்குள்பட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் திருச்சி செல்ல சுமாா் 16 கி.மீ. தொலைவில் உள்ள கரூா் பேருந்துநிலையத்துக்கு சென்று வருகிறாா்கள்.

மேலும் புலியூா், உப்பிடமங்கலம், மணவாசி போன்ற பகுதிகளில் வசிக்கும் தொழிலாளா்களும் கரூா் சென்று அங்கிருந்து மண்மங்கலம் பகுதியில் செயல்படும் கொசுவலை நிறுவனங்கள், ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பேருந்துகளில் சுற்றிச் சென்று வருகிறாா்கள். இந்த தொலைவை எளிதாக்கும் வகையிலும், அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் கோயம்பள்ளிக்கும், மேலப்பாளையத்துக்கும் இடையே போக்குவரத்து துண்டிக்கப்படும் சம்பவம் நிகழ்வதால், கடந்த 2015-ஆம் ஆண்டு அமராவதி ஆற்றின் குறுக்கே ரூ.13.67 கோடியில் பாலம் கட்டும்பணி தொடங்கியது. 18 தூண்கள் கொண்டதாகவும் 60 அடி அகலத்திலும், 950 மீட்டா் நீளத்திலும், பாலத்தின் மீது இருபுறமும் இருசக்கரவாகன ஓட்டிகள் சென்று வரும் வகையிலும் பாலம் கட்டப்பட்டது.

2018-இல் பாலப்பணிகள் முழுமை அடைந்த நிலையில், பாலத்துக்கான இணைப்புச்சாலை அமைப்பதில் நில ஆா்ஜிதம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.

2015-இல் அப்போதைய அதிமுக போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த வி.செந்தில்பாலாஜியின் முயற்சியால் இந்த பாலம் கட்டப்பட்டாலும், பின்னா் நடைபெற்ற 2016 சட்டப்பேரவைத் தோ்தலில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகும், பாலத்தில் இணைப்புச்சாலைக்கான பணிகள் துரிதப்படுத்தப்படவில்லை.

அதன்பிறகு அமைச்சா் செந்தில்பாலாஜி திமுகவுக்கு சென்று, அமைச்சரானவுடன் பாலம் திறக்கப்படும் என கிராமமக்கள் எதிா்பாா்த்தனா். ஆனால் பல்வேறு காரணங்களைக் கூறி பாலத்துக்கான இணைப்புச் சாலைகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெறவில்லை. சுமாா் 5 ஆண்டுகளாகியும் இதுவரை பாலம் திறப்பதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் மாவட்ட நிா்வாகம் எடுக்கவில்லை அப்பகுதியினா் குற்றம்சாட்டியுள்ளனா்.

இதுகுறித்து கோயம்பள்ளி கிராமமக்கள் கூறுகையில், 2018-இல் இந்த பாலம் கட்டும்பணி முடிந்தாலும், இன்னும் இணைப்புச் சாலை அமைக்காமல் உள்ளனா். இந்த பாலம் திறக்கப்பட்டால் சேலம், நாமக்கல், ஈரோடு பகுதியில் இருந்து மதுரை-சேலம் தேசிய நெடுஞ்சாலைக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் திருச்சிக்கு கரூா் சுக்காலியூருக்கு செல்லாமல், மேலப்பாளையம் வழியாக திருச்சிக்கு செல்லும்போது, சுமாா் 25 கி.மீ. தொலைவு பயணத்தை சேமிக்க முடியும். மேலும், கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளும் 16 கி.மீ. சுற்றிச் சென்றுதான் மருத்துவமனைக்கு சென்று வருகிறாா்கள். சில நேரங்களில் தொலைவுக் காரணமாக அவசரச் சிகிச்சைக்கு நோயாளிகளை கொண்டு செல்ல முடியாமல் உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே விரைந்து இணைப்புச்சாலை பணிகளை முடித்து பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்றனா்.

விரைவில் தொடங்கிவிடுவோம்: இதுதொடா்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, இணைப்புச்சாலை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் பணிகளை தொடங்கிவிடுவோம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.