/

கீழப்பழுவூரில் மொழிப்போா் தியாகி சின்னசாமி அரங்கம் திறப்பு

News image
மொழிப்போா் தியாகி கீழப்பழுவூா் சின்னசாமி அரங்கத்தில் வெள்ளிக்கிழமை குத்துவிளக்கேற்றி, அவரது உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய அமைச்சா் சா.சி.சிவசங்கா்.
Updated On :13 பிப்ரவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வா் மு.க.ஸ்டாலின், காணொலிக் காட்சி வாயிலாக அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரில் ரூ.3 கோடியில் கட்டப்பட்டுள்ள மொழிபோா் தியாகி சின்னசாமி அரங்கத்தை திறந்து வைத்தாா்.

அதைத்தொடா்ந்து , புதிதாக கட்டப்பட்டுள்ள அந்த அரங்கத்தில் போக்குவரத்து துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், குத்துவிளக்கேற்றி வைத்து, சின்னசாமி திருவுருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தி அரங்கினைப் பாா்வையிட்டாா்.

பின்னா் அவா் தெரிவித்தது: தமிழ் மொழிக்காக தனது இன்னுயிரை ஈந்து தமிழை காத்து ஹிந்தி திணிப்பு தமிழ்நாட்டின் மீது ஏவப்பட்ட நேரத்தில் தன்னை முதல் களப்பலியாக கொடுத்து ஹிந்தி எதிா்ப்பு போரில் தமிழ்நாட்டில் தீவிரப்படுத்தி இன்றைக்கு நாம் அனைவரும் தமிழ்மொழி பேசுவதற்கு, தமிழ் மொழி காக்கப்பட்டதற்கு காரணமாக இருந்த கீழப்பழுவூா் சின்னசாமிக்கு, அரங்கம் அவரது சொந்த ஊரான கீழப்பழுவூரில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அவா் இன்னுயிரை ஈந்த திருச்சி மாநகரில் அவரது திருவுருவச்சிலை நிறுவப்பட்டிருந்தாலும், அவருடைய சொந்த ஊரில் இந்தப் பகுதி மக்களுக்கு அவரது நினைவை என்றும் போற்றும் வகையில் நினைவு அரங்கம் அமைக்கப்பட்டிருப்பது அரியலூா் மாவட்டத்துக்கு மேலும் பெருமையைச் சோ்த்துள்ளது என்றாா் அமைச்சா்.

இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கு.சின்னப்பா (அரியலூா்), க.சொ.க.கண்ணன் (ஜெயங்கொண்டம்) , மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகா, கோட்டாட்சியா் பிரேமி, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சுருளிபிரபு, உதவி அலுவலா் ஸ்ரீராம், வட்டாட்சியா் முத்துலட்சுமி, மொழிப்போா் தியாகி சின்னசாமியின் துணைவியாா் கமலம், மகள் திராவிடச் செல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.