ஆக்கிரமிப்புகளால் அடையாளத்தை இழந்து நிற்கும் கண்டாரதித்தம் ஏரி
அரியலூர் மாவட்டம், கண்டாரதித்தம் கிராமத்தில் அமைந்திருக்கும் செம்பியன்மாதேவி பேரேரி எனப்படும் கண்டாரதித்தம் ஏரியை அணையாக மாற்றுவதோடு, பாரம்பரிய சின்னமாக்கி சுற்றுலாத்தலமாக அறிவிக்க


அரியலூர் மாவட்டம், கண்டாரதித்தம் கிராமத்தில் அமைந்திருக்கும் செம்பியன்மாதேவி பேரேரி எனப்படும் கண்டாரதித்தம் ஏரியை அணையாக மாற்றுவதோடு, பாரம்பரிய சின்னமாக்கி சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்தில் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது கண்டாரதித்தம் கிராமம். பராந்த சோழகனின் இளைய மகன் கண்டாரதித்தன் கி.பி. 950- லிருந்து 958 வரை சோழ சாம்ராஜியத்தை ஆண்ட போது, இங்கு தனது 2 ஆவது மனைவி செம்பியன்மாதேவியின் விருப்பத்தின்பேரில் வெட்டிய ஏரிதான் செம்பியன்மாதேவி பேரேரி. இந்த ஏரி தற்போது கண்டராதித்தம் ஏரி என அழைக்கப்படுகிறது.
4532.99 ஏக்கர் ஆயக்கட்டுப் பகுதிகளைக் கொண்ட இந்த ஏரியின் மொத்த பரப்பளவு 415.03 ஏக்கர்களாகும். கொள்ளிடத்திலிருந்து மழைக் காலங்களில்
நந்தியாறு, கூழையாறு சுமந்துவரும் உபரிநீர்தான் இந்த ஏரிக்கான நீர்வரத்து. 50-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் அடிப்படை வாழ்வாதாரமே இந்தஏரிதான் . இந்த ஏரியின் மதகு ஒன்றுக்கு ராஜராஜன் பெயரை வைத்த கண்டாரதித்தன், அதனை ராஜராஜன் தூம்பு என்றே அழைத்தாராம்.
திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியிலுள்ள நந்தியாறு மற்றும் கூழையாற்றிலிருந்து வரும் தண்ணீர் 7 மைல் தொலைவைக் கடந்து செம்பியன்மாதேவி பேரேரிக்கு வருகிறது. மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டால் இங்கு தண்ணீர் வந்து சேர ஒரு மாதமாகும்.
ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதி : 17.64 ச.கி.மீட்டரை ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதியாகக் கொண்ட இந்த ஏரியில் கிழக்கில் 7 மதகுகளும், வடக்கில் ஒரு மதகும் உள்ளன. ஏரியிலிருந்து விநாடிக்கு 47.04 கன மீட்டர் அளவுக்கு தண்ணீரை வெளியேற்ற முடியும்.
பல பெருமைகளைக் கொண்ட இந்த ஏரி இன்று தன் அடையாளத்தை இழந்து வண்டல் மண்ணோடு மேவிக் கிடக்கிறது. நீர்வரத்து இல்லாததால் சுற்றுப்புறப் பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாகக் குறைந்துவிட்டது.வெள்ளப் பெருக்குக் காலங்களில் கொள்ளிடத்தில் அளவுகடந்து செல்லும் வெள்ளத்தை தாங்கும் தடுப்பாக இந்த ஏரி, பலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதியாக மாறிவிட்டது.
1972 ஆம் ஆண்டில் கடும் பஞ்சம் ஏற்பட்ட போது வேலைக்கு உணவுத் திட்டத்தில் ஊர் மக்களால் தூர்வாரப்பட்ட ஏரி, முன்னாள் திமுக அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் முயற்சியின் காரணமாக மீண்டும் 1989 இல் தூர்வாரப்பட்டது.
ஆனால் ஏரியில் காட்டாமணக்குச் செடிகள் அதிகளவில் முளைத்து காடாகி போனதால் 1993 ஆம் ஆண்டில் பொதுமக்கள் மீண்டும் இந்த ஏரியைத் தூர்வாரினர். நிகழாண்டில் இந்த ஏரி தூர்வாரப்பட்டதாகக் கூறப்பட்டாலும் அவை பெயரளவிற்கே இருந்ததாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தண்ணீருக்கு அல்லாடும் நிலை ஏற்படும்: டோக்கியா பல்கலைக்கழக மாணவர்கள் தந்திருக்கும் ஆய்வறிக்கையின்படி, அரியலூர் மாவட்டத்திலுள்ள ஏரிகளை இனியும் தூர்வாராமல் விட்டால் மாவட்ட மக்கள் தண்ணீருக்கும், உணவுக்கும் அல்லாடும் நிலை விரைவில் உருவாகும் என்கிறார் அரியலூர் அரசுக் கலைக் கல்லூரியின் ஓய்வு பெற்ற முதல்வர் இல.தியாகராஜன்.
சாலை விரிவாக்கப் பணிக்கு மண் எடுக்கலாம்: சுமார் 460 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்த ஏரி தற்போது சீமை கருவேல முள்கள்முளைத்து காடாகக் காட்சியளிக்கிறது. தூர்வாரக் கோரி பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை.
தற்போது திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலைக்கான பணிகள் நடைபெறுவதால் கண்டாரதித்தம் ஏரி மண்ணை எடுத்துப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.
இதுபோல மற்ற ஏரிகளின் மண்ணையும் எடுத்துக் கொள்ள அனுமதிப்பதால் ஏரிகள் தூர்வாரப்படுவதுடன், அரசுக்கான செலவினங்களும் குறையும். ஏரிகளில் தண்ணீரும் தேங்கும் நிலை ஏற்படும். அரியலூர் மாவட்டத்தில் கங்கைகொண்டசோழபுரத்தில் பொன்னேரி, கண்டாரதித்தம் செம்பியன்மாதேவி பேரேரி ஆகிய இரண்டும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஏரிகள் என்பதால், அவற்றை அணைகளாக மாற்றி, பாரம்பரிய சின்னமாக அறிவித்து சுற்றுலாத்தலமாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுதான் எங்களின் பலநாள் கோரிக்கையாக உள்ளது என்கின்றனர் கண்டாரதித்தம் பெரியஏரி செம்பியன்மாதேவி பேரேரி மேம்பாட்டுச் சங்கத்தைச் சேர்ந்த பாளை திருநாவுக்கரசு, கருப்பையன், பாஸ்கர்.
பழைமைவாய்ந்த இந்த ஏரியைத் தூர வேண்டும் எனில் அரசுக்கு ரூ.100 கோடி வரை செலவாகும். அரசு கவனத்துக்கு கொண்டு சென்று அதற்கேற்ற வகையில்தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்கின்றனர் பொதுப்பணித் துறை அதிகாரிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...