மேலும், இவ்வழியாக அரியலூர் - பெண்ணாடம் செல்ல வேண்டிய தனியார் மற்றும் மினி பேருந்துகள், திட்டக்குடி, கருவேப்பில்லைக்குறிச்சி,விருத்தாசலம், ஆண்டிமடம், ஜயங்கொண்டம் ஆகிய பகுதிகளைச் சுற்றி வரவேண்டிய நிலை இருந்ததால் வேலைக்குச் செல்வோரும், மாணவ,மாணவிகளும் மிகவும் அவதிப்பட்டனர். இதனிடையே, கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகேயுள்ள சௌந்திரசோழபுரம், மாளிகைக் கோட்டம், பொன்னேரி, இறையூர், முருகன்குடி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களையும், அரியலூர் மாவட்டம், கோட்டைக்காடு, ஆலத்தியூர், முதுகுளம், தெத்தேரி, முள்ளுக்குறிச்சி, ஆதனகுறிச்சி, மாத்தூர்,செந்துறை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களையும் ஒன்றிணைக்கும் பகுதியாக உள்ள வெள்ளாற்றின் கரையோரம் சௌந்திரசோழபுரம் - கோட்டைக்காடு இடையே உயர்நிலை மேம்பாலம் அமைக்க வேண்டும். இதனால் சென்னை செல்லும் அரியலூர் மக்களுக்கு 30 கி.மீ. பயண நேரம் குறையும் என இரு மாவட்டப் பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர்.