டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

சின்னமுட்லு நீர்தேக்கத் திட்டம் நிறைவேற்றப்படுவது எப்போது?

பெரம்பலூர், டிச. 11: பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்பார்க்கப்பட்டு வரும் சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள

News image
Updated On :28 டிசம்பர் 2023, 3:57 pm

கே.​ தர்மராஜ்

பெரம்பலூர், டிச. 11: பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்பார்க்கப்பட்டு வரும் சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், விவசாயிகளும் வலியுறுத்தியுள்ளனர்.

   பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூர் அருகேயுள்ள மளையாளப்பட்டி பகுதியில் உள்ளது சின்னமுட்லு. இயற்கை எழில் சூழ்ந்த பச்சைமலை அடிவாரத்தின் மூன்று பக்கங்களும் மலையால் சூழ்ந்துள்ள இந்தப் பகுதியில் ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தை சேமித்து வைத்தால், கோடை காலங்களில் விவசாயப் பணிக்கும்,  வேப்பந்தட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த பொதுமக்களின் குடிநீர்த் தேவைக்கும்  பயன்படும் என்பது அரும்பாவூர் பகுதி சமூக நல ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகளின் கருத்தாகும்.

  மேலும், சின்னமுட்லு பகுதியில் உள்ள பச்சைமலை உச்சியில் இருந்து, கொட்டும் அருவியானது எட்டெருமை பாலி என்று அந்தப் பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது.   வடகிழக்குப் பருவ மழைக் காலமான அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரையிலான நான்கு மாதங்களும், பச்சைமலைப் பகுதியில் மிகுதியாகப் பொழியும் மழை நீரானது, எட்டெருமை பாலி அருவி வழியாக வழிந்தோடி, கல்லாற்றில் பெருக்கெடுத்து, அரும்பாலூர் பகுதியில் உள்ள பிரதான ஏரிகள் நிரம்பியது போக, எஞ்சிய மழைநீர் அனைத்தும் கல்லாற்றின் வழியாகக் கரைபுரண்டோடி கடலூர்  மாவட்டத்தில் கடலில் கலக்கிறது. பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் எந்தவிதப் பலனுமின்றி கடலில் கலக்கும் இந்த மழைநீரைச் சேமிக்க சின்னமுட்லு பகுதியில் நீர்த்தேக்கம் அமைக்க  வேண்டுமென அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைக்  கருத்தில் கொண்ட தமிழக அரசு, கடந்த 50 ஆண்டுகளாக நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பல்வேறு காரணங்களால் இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டு வந்தது.  இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சின்னமுட்லு நீர்த்தேக்கத்  திட்டத்தை நிறைவேற்ற தமிழக பொதுப் பணித் துறை மற்றும் வருவாய்த் துறையினர் அந்த நீர்த்தேக்கம் அமையவுள்ள இடத்தை ஆய்வு மேற்கொண்டு, இந்தத் திட்டத்தை செயல்படுத்த ரூ. 9 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்து, தமிழக அரசின் ஒப்புதலுடன், மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

  பின்னர், கடந்த 2005- 2006 ஆம் ஆண்டு மீண்டும் தமிழக அரசு  இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான திட்ட மதிப்பீட்டை ரூ. 11 கோடியாக உயர்த்தி, மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பி நிதியுதவி கோரியது.  இதனிடையே, முறையாக நீர் ஆதாரம், மண்ணின் தன்மை, பொதுமக்களின் கருத்துக் கேட்பு உள்ளிட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், எந்தவித  காரணமும், விளக்கமும் அளிக்காமல் சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டம்  கைவிடப்பட்டதாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசால்  அறிவிக்கப்பட்டது.

  அரசின் இந்த அறிவிப்பால், 50 ஆண்டு கால நீர்த்தேக்கத் திட்டம் கனவாகிவிட்டதால் விவசாயிகளும், பொதுமக்களும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இதனிடையே, கடந்த ஆக. 1 ஆம் தேதி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த எம்.விஜயகுமார், நீர்த்தேக்கத் திட்டம் அமையவுள்ள பகுதியைப் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

  இந்தத் திட்டம் ரூ. 20 கோடியில் அமைக்க பொதுமக்களிடம் கருத்துக்  கேட்கப்பட்டு, அதன்பிறகு அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும் என்று அவர்  தெரிவித்தார். ஆனால், அறிவிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

  இதுகுறித்து திருவள்ளுவர் உழவர் மன்றத் தலைவர் கு. வரதராசன் கூறியது:

  சின்னமுட்லு அணைக்கட்டுத் திட்டத்தை நிறைவேற்ற முந்தைய திமுக ஆட்சிக்  காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும், அந்தத் திட்டத்தை  நடைமுறைப் படுத்துவதில் சிறு, சிறு பிரச்னைகள் நீடித்ததால், அந்தத் திட்டம்  இன்றுவரை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

   சின்னமுட்லு நீர்த்தேக்கம் நிறைவேற்றப்பட்டால், வேப்பந்தட்டை பகுதியைச்  சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் பயன்பெறுவதோடு, அந்தப் பகுதியில்  நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்றார் அவர்.  எனவே, தமிழக அரசு வேப்பந்தட்டை வட்டார பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மறு பரிசீலனை செய்து, சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே  அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

  மேலும், இயற்கை எழில் சூழ்ந்துள்ள அந்தப் பகுதியில் உள்ள எட்டெருமை பாலி அருவியில் குழந்தைகள் முதல் பெரியவர் வரையிலான அனைத்துத் தரப்பினரும், அருவிக்குச் சென்று நீராடும் வகையில், அந்தப் பகுதியை சுற்றுலாத் தலமாக  அறிவித்து, போதுமான சாலை மற்றும் போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டுமென பொதுமக்களும், இளைஞர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.