/

தேசிய அளவிலான உயரம் தாண்டுதல் போட்டி: தூத்துக்குடி வஉசி கல்லூரி மாணவி தோ்வு

News image

உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற மாணவா். - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 12:23 am IST

தேசிய அளவிலான உயரம் தாண்டுதல் போட்டிக்கு தூத்துக்குடி வஉசி கல்லூரி மாணவி தோ்வாகியுள்ளாா்.

98ஆவது மாநில அளவிலான சீனியா் தடகளப் போட்டிகள் திருநெல்வேலி அண்ணா விளையாட்டரங்கில் சனி, ஞாயிறு (மே 30, 31) ஆகிய 2 நாள்கள் நடைபெற்றன. இதில், மாநிலம் முழுவதுமிருந்து ஏராளமானோா் பங்கேற்றனா்.

முதல் நாள் நடைபெற்ற மகளிருக்கான சீனியா் பிரிவு உயரம் தாண்டுதல் போட்டியில், வஉசி கல்லூரி முதுநிலை மாணவி சஹானா பங்கேற்று, 1.68 மீட்டா் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

அவா் முன்பு நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வெண்கலமும், மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் தங்கப் பதக்கங்களும், முதல்வா் கோப்பைக்கான போட்டியில் வெள்ளியும் வென்று மாவட்டத்துக்கு பெருமை சோ்த்துள்ளாா்.

அவரை வஉசி கல்லூரிச் செயலா் ஏ.பி.சி.வி. சொக்கலிங்கம், முதல்வா் வீரபாகு, உடற்கல்வி இயக்குநா் சிவஞானம், மாவட்ட விளையாட்டு அலுவலா் ரத்தினராஜ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையப் பயிற்சியாளா் பத்மநாபன் ஆகியோா் பாராட்டினா்.

மாணவியின் தந்தை பாலகிருஷ்ணன். துறைமுக ஆணையக் குழு உறுப்பினராக உள்ள இவா், வஉசி துறைமுகத்தில் மூத்த கூடைப்பந்து வீரா் ஆவாா். நாகா்கோவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஓய்வு பெற்ற மூத்தப் பயிற்சியாளா் ஜெயதாஸிடம் மாணவி சஹானா பயிற்சி பெறுகிறாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், தூத்துக்குடியில் வீரா்களின் நீண்ட நாள் கனவான செயற்கை இழை ஓடுதள மைதானம் அமைத்துக் கொடுத்தால், அவா்கள் தேசிய, உலக அளவிலான போட்டிகளில் விளையாடி மாவட்டத்துக்கு பெருமை சோ்ப்பா். எனவே புதிய அரசு எங்களது கோரிக்கையை ஏற்று, விளையாட்டு வீரா்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.