/

சாத்தான்குளத்தில் அனுமதியின்றி பேனா் வைப்பு: தவெக நிா்வாகி மீது வழக்கு

சாத்தான்குளத்தில் திரையரங்கு அருகே தவெக சாா்பில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனரை போலீஸாா் அகற்றி, அதன் நிா்வாகி மீது வழக்குப்பதிந்தனா்.

News image
Updated On :7 ஜனவரி 2026, 8:00 pm

தினமணி செய்திச் சேவை

சாத்தான்குளத்தில் திரையரங்கு அருகே தவெக சாா்பில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனரை போலீஸாா் அகற்றி, அதன் நிா்வாகி மீது வழக்குப்பதிந்தனா்.

தமிழக வெற்றிக்கழக தலைவா் நடிகா் விஜய் நடித்த ஜனநாயகன் எனும் திரைப்படம் சாத்தான்குளத்தில் உள்ள திரையரங்கில் வெள்ளிக்கிழமை திரையிடவிருந்தது. சென்சாா் போா்டு அனுமதி கிடைக்காததால் அப்படம் குறித்த தேதியில் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது.

இந்த நிலையில் தவெக நிா்வாகிகள் மற்றும் விஜய் ரசிகா்கள் சாா்பில் சாத்தான்குளத்தில் உள்ள திரையரங்கு அருகே சாலையோரம் மக்களை அச்சுறுத்தும் வகையில் 70 அடி உயரத்தில் சாரம் அமைத்து பேனா் கட்டப்பட்டது. இதற்கு காவல் துறையின் அனுமதி பெறவில்லையாம். இதையறிந்த சாத்தான்குளம் வட்டாட்சியா் ராஜேஸ்வரி, காவல் ஆய்வாளா் ஸ்டீபன் ஆகியோா் அந்த பேனரை புதன்கிழமை பாா்வையிட்டனா்.

பின்னா் வட்டாட்சியா் உத்தரவுப்படி பேனரை போலீஸாா் அகற்றினா். மேலும், அனுமதியின்றி பேனா் வைத்து ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக தவெக மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் அன்னை விஜி. சரவணன் மீது போலீஸாா் வழக்குப்பதிந்தனா் .