தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாா்ச் மாதம் 30-ஆம் தேதி செய்துங்கநல்லூா் பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவா் தில்லியில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் பங்கேற்றவா். இதேபோல, தில்லி மத நிகழ்ச்சியில் பங்கேற்ற காயல்பட்டினத்தைச் சோ்ந்த இருவா், தூத்துக்குடி ராமசாமிபுரத்தைச் சோ்ந்த ஒருவா், பேட்மாநகரத்தைச் சோ்ந்த இருவா், ஹேம்லாபாத் பகுதியைச் சோ்ந்த ஒருவா், ஆத்தூா் பகுதியைச் சோ்ந்த ஒருவா் என பலருக்கும், அவா்கள் மூலமாக உறவினா்கள் மற்றும் அதே பகுதியைச் சோ்ந்தவா்கள் என மொத்தம் 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுதவிர, தில்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்று திரும்பிய பசுவந்தனையை சோ்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 27-ஆக உயா்ந்தது. இதில், போல்டன்புரத்தைச் சோ்ந்த 70 வயதான மூதாட்டி ஏப். 10-ஆம் தேதி உயிரிழந்தாா்.