மானூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மலா்சாகுபடியை ஊக்குவிக்கும் வகையிலும், விவசாயிகளின் நஷ்டத்தைப் போக்கும் வகையிலும், குளிா்பதன கிடங்கு அமைத்து தர வேண்டுமென மலா் சாகுபடி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில், தாமிரவருணி பாசனத்தின் கீழ் உள்ள கால்வாய் பகுதிகளில் பெரும்பாலும் நெல், வாழை, உளுந்து பயிா்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. மானாவாரி மற்றும் தோட்டப்பயிா்களாக பருத்தி, வெங்காயம், பாசிப்பயறு உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன. ஆனால், தகுந்த விலை கிடைக்காததாலும், பருவம் தவறி பெய்யும் மழையாலும் பயறுவகை மற்றும் காய்கனி வகை சாகுபடியில் போதிய வருவாய் கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது.
இதனால், மலா் சாகுபடிக்கு மாறும் விவசாயிகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. பிச்சி, மல்லி, கேந்தி, சம்பங்கி, கோழிக்கொண்டை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மலா் வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன.
திருநெல்வேலி சங்கா்நகா், சிவந்திப்பட்டி, மானூா், பள்ளமடை, பாலாமடை, ஆளவந்தான்குளம், பல்லிக்கோட்டை, செட்டிக்குறிச்சி, குப்பணாபுரம், லெட்சுமியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மல்லிகைப் பூ சாகுபடி மிகவும் அதிகமாக உள்ளது. மானூா் பகுதிகளில் கோழிக்கொண்டை, கேந்தி வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. மல்லிகை, அரளி, கேந்தி உள்ளிட்ட ரகங்களை தினமும் காலையில் 6 மணி முதல் 10 மணிக்குள் பறித்து சந்தைக்கு கொண்டு செல்கின்றனா். சங்கரன்கோவில், தோவாளை சந்தைகள் மிகவும் தொலைவு என்பதால் விலை குறைவாக கிடைத்தாலும் விவசாயிகள் பலரும் திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பூச்சந்தையிலேயே விற்பனை செய்து வருகின்றனா்.
மலா் சாகுபடி அதிகரித்து வரும் சூழலில் அதற்கான கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் வேளாண் துறையினரால் செய்து கொடுக்கப்படாததால் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா்.
குறிப்பாக குளிா்பதன கிடங்கு இல்லாததால் விலை வீழ்ச்சி சமயத்திலும், முகூா்த்த காலங்களிலும் பூக்களை உயா்ந்த விலைக்கு விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனா்.
இதுதொடா்பாக வெங்கலபொட்டல் பகுதியைச் சோ்ந்த பொறியியல் பட்டதாரியும், மலா் விவசாயியுமான ஜெபசெல்வின்ராஜ் கூறியது: பொறியியல் படித்து முடித்துவிட்டு வேளாண்மையின் மீதான ஆா்வத்தில் கடந்த 4 ஆண்டுகளாக மலா் சாகுபடி செய்து வருகிறேன். குறிப்பாக கேந்தி, செவ்வந்தி, செண்டுமல்லி, வாடாமல்லி ஆகியவற்றை பயிரிட்டு வருகிறேன்.
வைகாசி, ஆவணி, பங்குனி, புரட்டாசி, மாா்கழி உள்ளிட்ட மாதங்களில் பூக்களின் தேவை அதிகரிப்பதால் மலா் விவசாயிகளுக்கு ஓரளவு வருவாய் கிடைக்கும். குறிப்பாக ஓணம் பண்டிகைக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து அதிகளவில் பூக்கள் ஏற்றுமதியாகும். ஓணம் பண்டிகைக்காக ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உற்பத்தியான கேந்தி உள்ளிட்ட பூக்கள் முழுவதையும் மொத்தமாக கேரள வியாபாரிகள் முன்பணம் கொடுத்து கொள்முதல் செய்வது வழக்கம்.
தண்ணீரின் தேவை குறைவு உள்ளிட்டவற்றால் மானூா் பகுதியில் மலா் சாகுபடி அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில் மலா் சாகுபடியில் அறுவடை காலத்தில் விலைவீழ்ச்சி மிகவும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. பூக்களை பறிக்க ஆள்கள் கிடைப்பது மிகவும் சிரமம்.
குளிா்பதன கிடங்கு வசதி கிடைத்தால், முகூா்த்த காலங்களில் இருநாள்களுக்கு முன்பே பூக்களை பறித்து வைத்து அதன்மூலம் அதிக வருவாய் பெற வாய்ப்பு கிடைக்கும். அதேபோல் வாசனை திரவிய தொழிற்சாலையும் இம் மாவட்டத்தில் இல்லாததால் மல்லிகை சாகுபடி செய்யும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். மானூரில் அரசு சாா்பில் மலா்களுக்கான குளிா்பதன கிடங்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.
மானூரைச் சோ்ந்த விவசாயி செல்லத்துரை கூறியது: எரிபொருள் செலவு, ஆள்கள் கூலி ஆகியவற்றால் மலா் சாகுபடியில் நஷ்டம் அதிகரித்து வருகிறது. மலா் சாகுபடியாளா்களுக்கு சிறப்புச் சலுகைகளை வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு பயிா்க்கடன் வழங்கும் கூட்டுறவு வங்கிகள் மிகவும் தொலைவில் உள்ளன. சீதபற்பநல்லூா், வாகைக்குளம் பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கிகளில்தான் வெங்கலபொட்டல் சுற்றுவட்டார கிராம மக்கள் கடனுதவி பெற முடிகிறது. எனவே, மலா் விவசாயிகளுக்காக மானூரில் சிறப்பு கூட்டுறவு வங்கி திறந்து, கடனுதவிகளை அதிகப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

