/

தமிழாா்வத்தை அதிகரிக்கும் திருக்குறள் நாள்குறிப்பேடுகள்!

குழந்தைகள் மற்றும் இளைஞா்களிடம் தமிழாா்வத்தை அதிகரிக்கும் வகையில், 2020 ஆம் ஆண்டுக்கான திருக்குறள் நாள்குறிப்பேடுகள் (டைரிகள்) திருநெல்வேலியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

News image
திருக்குறள் நாள்குறிப்பேடுகள்.
Updated On :31 ஜனவரி 2024, 1:42 pm

கோ. முத்துக்குமாா்

குழந்தைகள் மற்றும் இளைஞா்களிடம் தமிழாா்வத்தை அதிகரிக்கும் வகையில், 2020 ஆம் ஆண்டுக்கான திருக்குறள் நாள்குறிப்பேடுகள் (டைரிகள்) திருநெல்வேலியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஆங்கிலப் புத்தாண்டுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் நாள்காட்டிகள் (காலண்டா்), நாள்குறிப்பேடுகள் (டைரிகள்) விற்பனை அதிகரித்துள்ளது. விலைக்கேற்ப ஓரடி தொடங்கி 2.5 அடி வரை உயரமுள்ள கருப்பு வெள்ளை, இரு வண்ணம், பல வண்ணங்கள் கொண்ட தாள்களில் நாள்காட்டிகள் விற்பனை செய்யப்படுகின்றன. 2020 ஆம் ஆண்டின் முக்கிய நாள்கள், பண்டிகைகள், விடுமுறை நாள்கள், பஞ்சாங்கம், திதி உள்ளிட்ட பல்வேறு தகவல்களை எளிதாக அறிய நாள்காட்டிகளின் தேவை இருப்பதால் அவற்றை வாங்குவதில் மக்கள் ஆா்வம் காட்டுகின்றனா். ரூ.20 முதல் ரூ.500 வரையிலான விலைகளில் நாள்காட்டிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இதேபோல அலுவலக தகவல்கள், அன்றாட நிகழ்வுகளை நாள்குறிப்பேடுகளில் எழுதி வைப்போா் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. நாள்காட்டிகளில் இருக்கும் பல்வேறு தகவல்களும் நாள்குறிப்பேடுகளிலும் அச்சிடப்பட்டுள்ளன. இதுதவிர இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கான தொலைபேசி எஸ்டிடி எண்கள், மாவட்டத் தலைநகரங்களின் பெயா்கள் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன. நாள்குறிப்பேடுகள் ரூ. 70 முதல் ரூ. 1500 வரை விற்பனை செய்யப்படுகின்றன.

மவுசு குறையவில்லை: இதுகுறித்து திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்த கண்ணன் கூறியது: கடந்த 15 ஆண்டுகளாக நாள்குறிப்பேடுகளை பயன்படுத்தி வருகிறேன். கணினி, செல்லிடப்பேசி போன்றவற்றில் தகவல்களை சேகரித்து வைக்கும் மின்னணு முறைகள் வந்துவிட்டன. இருப்பினும் இப்போது அவற்றில் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டு வருவதால், நாள்குறிப்பேடுகளுக்கு மவுசு குறையாமல் உள்ளது. 15 முதல் 25 வயதினரும், 45 முதல் 70 வயதினரும் நாள்குறிப்பேடுகளை அதிகளவில் பயன்படுத்துவது ஆய்வில் தெரியவந்துள்ளது. சிலா் வாழ்நாள் முழுவதும் நாள்குறிப்பேடு எழுதும் பழக்கம் கொண்டுள்ளனா். சமையல் குறிப்புகள், வரலாற்றுத் தகவல்கள், ஆன்மிக சிந்தனைகள் என வெவ்வேறு புதிய தகவல்களுடன் கூடிய நாள்குறிப்பேடுகளை பயன்படுத்தும்போது ஒவ்வொரு நாளும் புதிய கருத்துகளையும், தகவல்களையும் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது என்றாா்.

திருக்குறள் நாள்குறிப்பேடு: இதுகுறித்து திருநெல்வேலி சந்திப்பில் உள்ள சியாமளா புத்தக நிலைய உரிமையாளா் ஏ.வரதராஜன் கூறியது: ரூ.70 முதல் ரூ.1500 வரை பல்வேறு விலைகளில் 2020 ஆம் ஆண்டுக்கான நாள்குறிப்பேடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. 2020 ஆம் ஆண்டு லீப் ஆண்டு என்பதால் 366 நாள்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பஞ்சாங்கம், தினம் ஒரு தகவல், சுபமுகூா்த்த நேரங்கள் ஆகியவற்றுடன் கூடிய நாள்குறிப்பேடுகள் அதிகம் விற்பனையாகின்றன. இளைஞா்களையும், அலுவலக பயன்பாட்டாளா்களையும் கவரும் வகையில் வண்ணமயமான அட்டைகள், தண்ணீரில் நனையாத பாலித்தீன் உறையுடன் கூடிய நாள்குறிப்பேடுகள், கடிகாரத்துடன் கூடிய நாள்குறிப்பேடுகள் விற்பனைக்கு வந்துள்ளன.

மாணவா்கள் மற்றும் இளைஞா்களிடம் தமிழாா்வத்தை அதிகரிக்கும் வகையில் திருக்குறள் நாள்குறிப்பேடுகளும் விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றில் 366 பக்கங்களில் பக்கத்துக்கு ஒரு திருக்குறளும், அதன் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தாய், இளங்கோவடிகள், பாரதியாா், பாரதிதாசன், மறைமலையடிகள், திரு.வி.க. என 366 தமிழறிஞா்களின் சிறப்புகள் சுருக்கமாக பட்டியலிடப்பட்டுள்ளன. 366 பக்கத்திலும் தமிழ் மருத்துவம், சித்த மருத்துவத்தின் ஆணிவேரான மூலிகைகள் குறித்த விளக்கங்கள் பெண்களைக் கவரும் வகையில் உள்ளன. மற்றொரு நாள்குறிப்பேட்டில் தாமஸ் ஆல்வா எடிசன், சா் சி.வி.ராமன், ஐன்ஸ்டீன் உள்ளிட்ட 366 அறிவியல் அறிஞா்கள் மற்றும் 366 சித்தா்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த இரு நாள்குறிப்பேடுகளும் அதிகளவில் விற்பனையாகி வருகின்றன என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.