/

மாநகராட்சி புதிய அலுவலக கட்டடத்துக்கான சிக்கல் தீர்ந்தது; பணிகள் எப்போது?

கடந்த 39 மாதங்களுக்கு மேலாகக் கிடப்பில் இருந்த திருநெல்வேலி  மாநகராட்சியின் புதிய அலுவலகக் கட்டட கட்டுமானப்

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:26 am

ஆர். முருகன்

கடந்த 39 மாதங்களுக்கு மேலாகக் கிடப்பில் இருந்த திருநெல்வேலி  மாநகராட்சியின் புதிய அலுவலகக் கட்டட கட்டுமானப் பணிக்கான இடையூறுகள் அனைத்தும் விலகியுள்ள நிலையில், இனியாவது விரைவு பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தக் கட்டுமானப் பணிகளுக்கு புதிய ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டு பணி ஆணை வழங்கவுள்ள நிலையில், மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் வியாழக்கிழமை கூடி இதற்கு தீர்மானம் நிறைவேற்றவுள்ளது.

புதிய கட்டடம்: திருநெல்வேலி மாநகராட்சிக்கு ஒருங்கிணைந்த புதிய மைய அலுவலகக் கட்டடம் ரூ.5 கோடியில் கட்டுவதற்கு கடந்த 2010 மே மாதம் மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, மாநகராட்சி வளாகத்தில் உள்ள பழைய பழுதடைந்த பிரதான கட்டடத்தை இடித்துவிட்டு அங்கு தரைத் தளம், முதல் தளம், 2ஆவது தளம் ஆகியவற்றுடன் மொத்தம் 42 ஆயிரத்து 646 சதுர அடி பரப்பளவில் புதிய ஒருங்கிணைந்த கட்டடம் கட்டத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கு நகராட்சி நிர்வாக இயக்குநர் அனுமதியளித்ததைத் தொடர்ந்து, பெங்களூருவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்துக்கு பணி ஆணை வழங்கப்பட்டு 2011ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அப்போதைய ஆட்சியர் ஜெயராமன் தலைமையில் இந்த விழா நடைபெற்றது.

பணியில் தொய்வு: இதையடுத்து, நூற்றாண்டு பெருமை மிக்க வஉசி கட்டடம் இடிக்கப்பட்டதோடு, அதில் புதிய கட்டடம் அமைப்பதற்காக அஸ்திவாரம் தோண்டும் பணிகளும் நடந்தன.

ஆனால், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததால் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. கட்டுமானப் பணியை ஏற்றுக்கொண்ட நிறுவனமும், உள் ஒப்பந்த அடிப்படையில் மாற்று நிறுவனத்துக்கு பணிகளை வழங்க முன்வந்தது. ஆனால், இந்த முடிவுக்கு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாமன்றத்துக்கு புதிதாகத் தேர்வு  செய்யப்பட்டவர்களுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படாத காரணத்தால் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. இதுவரை செய்த பணிகளுக்கு மட்டும் பணத்தை வழங்குமாறு கட்டுமான நிறுவனம் கோரியதற்கும் மாநகராட்சி நிர்வாகம் இசைவு தெரிவிக்கவில்லை.

இதையடுத்து, இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்றது. நீதிமன்றமோ லோக் அதாலத் மூலம் இப் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தியது. லோக் அதாலத் மூலம் கடந்த மாதம் இப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காணப்பட்டு இப்போது புதிதாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் நிறுவனம்: 2013-14ஆம் ஆண்டுக்குரிய திருத்திய மதிப்பீட்டுத் தொகையாக ரூ.4.30 கோடியில் புதிய கட்டடம் கட்டுவதற்கு 30.8.2013இல் நகராட்சி நிர்வாக ஆணையரக முதன்மை பொறியாளர் தொழில்நுட்ப அனுமதியளித்தார். இதைத் தொடர்ந்து 2 முறை ஒப்பந்தப்புள்ளி அழைப்பு விடுக்கப்பட்டது. இரண்டாவது முறையாக கடந்த 3.4.2014இல் ஒப்புந்தப்புள்ளி கோரப்பட்டதில் ஆந்திர மாநிலம், குண்டூரைச் சேர்ந்த தனியார் நிறுவனமும், ராமநாதபுரத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனமும் விண்ணப்பித்தன. இந்த விண்ணப்பங்கள் மீது ஒப்பந்தப்புள்ளி கூர்ந்தாய்வுக் குழு கூட்டம் இறுதி முடிவு எடுத்து, ராமநாதபுரம் நிறுவனத்துக்கு பணிகளை வழங்க முடிவு செய்தது.

ஆனால், அந்த நிறுவனத்தின் விலைப்புள்ளியானது ஒப்பந்தப்புள்ளியைவிட 14.79 சதவீதம் கூடுதலாக இருந்ததால் விலைக்குறைப்பு செய்ய மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையேற்று விலைக் குறைப்பு செய்ததில் ரூ.4 கோடியே 30 லட்சத்து 46 ஆயிரத்து 180-க்கு பணிகளை முடிக்க ராமநாதபுரம் நிறுவனம் இசைவு தெரிவித்தது.

இது, மாநகராட்சியின் ஒப்பந்தப்புள்ளி மதிப்பைவிட 9.93 சதவீதம் கூடுதலாக இருந்தாலும், கூடுதல் தொகையை மாநகராட்சியின் பொது நிதியிலிருந்து மேற்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி வழங்குவதற்காக மாமன்றத்தின் ஒப்புதலுக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

பணி ஆணை எப்போது? இதுதொடர்பாக, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் லட்சுமி கூறியது:

மாநகராட்சி புதிய கட்டடத்துக்காக புதிய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு மாமன்றத்தின் பார்வைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. வியாழக்கிழமை (மே 29) நடைபெறும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறினால் உடனடியாக பணி ஆணை வழங்கப்படும். விரைந்து பணிகள் தொடங்கப்படும். கட்டுமான நிறுவனம் உறுதியளிக்கும் காலத்துக்குள் பணிகளை விரைந்து முடிக்க ஆவன செய்யப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.