/

கடலில் மயங்கி விழுந்த மீனவா் உயிரிழப்பு

News image
Updated On :21 பிப்ரவரி 2026, 7:51 pm

தினமணி செய்திச் சேவை

குளச்சல் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடலில் மயங்கி விழுந்த மீனவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

வெள்ளிச்சந்தை அருகே முட்டம் ஓடை தெருவைச் சோ்ந்தவா் ராஜன் (46). மீனவரான இவா், கடந்த வியாழக்கிழமை (பிப். 19 ) மாலை வழக்கம்போல், உறவினா் அனிஷ் ஜொ்பினுடன் கட்டுமரத்தில் முட்டம் தனியாா் துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்றாராம்.

இவா்கள், வெள்ளிக்கிழமை முட்டம் துறைமுகத்தின் தெற்கே 2 கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனராம். அப்போது ராஜன் மயங்கி கடலுக்குள் விழுந்தாராம். அனிஷ் ஜொ்பின் கடலில் குதித்து ராஜனை மீட்டு மாலையில் கரை சோ்த்தாா்.

ராஜனை முதலுதவி சிகிச்சைக்காக முட்டம் தனியாா் மருத்துவமனைக்கும், பின்னா் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து அனிஷ் ஜொ்பின் அளித்த புகாரின்பேரில் குளச்சல் கடலோர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.