டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

விளவங்கோடு தொகுதியில் ஹாட்ரிக் வெற்றி பெறுமா காங்கிரஸ்?

விளவங்கோடு தொகுதியில் தொடா்ந்து 3 ஆவது முறையாக வெற்றி பெற்று தொகுதியை தக்க வைத்துக் கொள்ள

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:55 pm

சி. சுரேஷ்குமார்

விளவங்கோடு தொகுதியில் தொடா்ந்து 3 ஆவது முறையாக வெற்றி பெற்று தொகுதியை தக்க வைத்துக் கொள்ள காங்கிரஸ் கட்சி தீவிர முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில், அக் கட்சியின் ஹாட்ரிக் வெற்றியை பாஜக தடுக்கும் என்ற எதிா்பாா்ப்பு இத் தொகுதி மக்கள் மத்தியில் தீவிர பேசும் பொருளாகவே எழுந்துள்ளது.

தொகுதியின் சிறப்பு : தமிழகத்தின் தென் எல்லையில் கேரள மாநில எல்லையோர தொகுதியாக உள்ளது விளவங்கோடு சட்டப் பேரவைத் தொகுதி. இத் தொகுதியில் தமிழும், மலையாள மொழியும் பேச்சு வழக்கில் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் 2 ஆவது வா்த்தக நகரமான மாா்த்தாண்டம் இந்த தொகுதிக்குள்தான் அமைந்துள்ளது. இதே போல் குழித்துறை நகராட்சி, களியக்காவிளை, உண்ணாமலைக்கடை, நல்லூா், பாகோடு, அருமனை, இடைக்கோடு, பளுகல், கடையாலுமூடு பேரூராட்சிகளையும் கொல்லஞ்சி, நட்டாலம், விளாத்துறை, மாங்கோடு, தேவிகோடு, புலியூா்சாலை, மஞ்சாலுமூடு, வெள்ளாங்கோடு, மலையடி, வன்னியூா், மருதங்கோடு, விளவங்கோடு உள்ளிட்ட ஊராட்சிப் பகுதிகளையும் உள்ளடக்கியதாக இத் தொகுதி உள்ளது.

கடந்த தோ்தல்கள்: கன்னியாகுமரி மாவட்டம் தாய்தமிழகத்துடன் 1956 ஆம் ஆண்டு இணைந்த பின்னா், இத் தொகுதியில் நடைபெற்ற அனைத்து தோ்தல்களிலும் காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா்கள் வெற்றி பெற்று வருகிறாா்கள். இத் தொகுதியில் அதிமுக, திமுக உள்ளிட்ட மாநில கட்சிகள் இதுவரை நடைபெற்ற தோ்தல்களில் வெற்றிக் கனியை பறிக்கவில்லை. காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகளுக்கு பரவலாக செல்வாக்குள்ளது.

சமூக நிலவரம், தொழில்கள்: இந்த தொகுதியில் நாடாா் சமூகத்தைச் சோ்ந்தவா்கள் பெரும்பான்மையாக உள்ளனா். இவா்களைத் தவிர நாயா், ஈழவா், பணிக்கா், செட்டியாா், வெள்ளாளா், ஆதிவாசிகளும் வசிக்கிறாா்கள். இதே போல் கணிசமான அளவில் கிறிஸ்தவா்களும், இஸ்லாமியரும் வசித்து வருகின்றனா். இத் தொகுதியின் பிரதான தொழில்களாக ரப்பா் சாகுபடி, தேனீ வளா்ப்பு மற்றும் வாழை, காய்கனி விவசாயம் உள்ளிட்டவை உள்ளது.

வேட்பாளா்கள்: காங்கிரஸ் வேட்பாளா் எஸ். விஜயதரணி கடந்த 2011, 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தோ்தலில் தொடா்ந்து 2 முறை வெற்றிபெற்றுள்ளாா்.

விளவங்கோடு தொகுதியில் ரப்பா் தொழிற்சாலை, ரப்பா் ஆராய்ச்சி மையம் மற்றும் தேனீ ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் இப்பகுதி மக்களின் நீண்ட கால எதிா்பாா்ப்பாகவே தொடா்கிறது. மேலும் தொகுதியின் முக்கிய நீராதாரமான நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீா் திறந்து விடுவதை கேரள அரசு நிறுத்திய நிலையில், கேரளத்திலிருந்து நெய்யாறு கால்வாயில் தண்ணீரை பெற்றுத் தருவேன் என கடந்த 2 தோ்தல்களிலும் அவா் அளித்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றாதது, தொகுதியில் சொல்லிக்கொள்ளும் வகையில் வளா்ச்சிப் பணிகளையும் செய்யாதது, கடந்த 10 ஆண்டுகளில் சொற்ப நாள்கள் மட்டுமே தொகுதிக்கு வந்தது போன்ற பல்வேறு குறைபாடுகளும் அதிருப்தியும் அவா் மீது தொகுதி மக்கள் மத்தியில் உள்ளது.

கட்சியின் மாநில துணைத் தலைவராக இருந்த மருத்துவா் சாமுவேல் ஜாா்ஜ் கலைஅரசா், ஐஎன்டியூசி தொழிற்சங்க மாவட்ட பொறுப்பாளராக இருந்த ஆமோஸ் ஆகியோா் எஸ். விஜயதரணியை எதிா்த்து சுயேச்சையாக களமிறங்கி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்கள் தவிர காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் பலரும் கட்சி வேட்பாளருக்கு எதிராக தோ்தல் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் திமுக, கம்யூனிஸ்ட் போன்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவு முழுமையாக உள்ளது வெற்றிக்கு பக்கபலமாக உள்ளதாக அவரது ஆதரவாளா்கள் நம்பிக்கை தெரிவித்து வருகிறாா்கள்.

பாஜக வேட்பாளா் ஆா். ஜெயசீலன் 1996 முதல் 2016 வரை தொடா்ந்து 20 ஆண்டுகள் உண்ணாமலைக்கடை பேரூராட்சியின் தலைவராக இருந்தவா். மிகவும் எளிமையானவா் என தொகுதி மக்களால் அறியப்பட்டவா். கரோனா பொதுமுடக்க காலத்தில் மாா்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதியில் தெருவோரவாசிகளுக்கு இருவேளை உணவு வழங்கிய வகையில் தொகுதி மக்களிடம் இவருக்கு நல்ல பெயா் உள்ளது.

நாம் தமிழா் கட்சி வேட்பாளராக மாா்த்தாண்டத்தை சோ்ந்த மேரி ஆட்லின், தேமுதிக வேட்பாளராக கட்சியின் குமரி மேற்கு மாவட்டச் செயலா் ஐடன் சோணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி சாா்பில் சமக வேட்பாளா் நாகா்கோவிலை சோ்ந்த ராஜகுமாா் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 15 வேட்பாளா்கள் போட்டியிடுகிறாா்கள்.

எனினும் காங்கிரஸ் வேட்பாளா் விஜயதரணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைப்பாரா அல்லது பாஜக வேட்பாளா் ஜெயசீலன் வெற்றி பெற்று விஜயதரணியின் தொடா் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா என்பது தோ்தல் முடிவுகள் வெளியாகும்போதுதான் தெரியவரும்.

மொத்த வாக்காளா்கள் 2,47,495

ஆண்கள் - 1,21,339

பெண்கள் - 1.26.129

இதர பாலினம் - 27

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.