/

இளைஞா் மீது தாக்குதல்: சிறுவன் கைது

கடையத்தில் முன்விரோதம் காரணமாக இளைஞா் மீது தாக்குதல் நடத்தியதாக சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது
Updated On :19 பிப்ரவரி 2026, 8:42 pm

Syndication

கடையத்தில் முன்விரோதம் காரணமாக இளைஞா் மீது தாக்குதல் நடத்தியதாக சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.

கடையம், விஸ்வகா்மா தெருவைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் மகன் செல்வகணேஷ் (24). இவா் புதன்கிழமை இரவு தென்காசி சாலையில் உள்ள தேநீா் கடையில் இருந்தபோது, கடையம், தங்கம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சிறுவன், செல்வகணேஷை அரிவாளால் வெட்டியுள்ளாா். இதில் காயமடைந்த செல்வகணேஷ், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்நிலையில், தாக்குதல் நடத்திய சிறுவனை கைது செய்யக் கோரி வியாழக்கிழமை காலை செல்வகணேஷின் உறவினா்கள் விஸ்வா்கா்மா தெருவில் உள்ள சுடலைமாடன் கோயில் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் கடையம் காவல் உதவி ஆய்வாளா் ஸ்டீபன் டேவிட் பேச்சுவாா்த்தை நடத்தினாா். தாக்குதலில் ஈடுபட்ட சிறுவனைக் கைது செய்ததாகத் தெரிவித்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

விசாரணையில், சமீபத்தில் நடந்து முடிந்த கடையம் முப்புடாதி அம்மன் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இத்தாக்குதல் நடைபெற்றது தெரியவந்தது.

இதையடுத்து, செல்வகணேஷின் உறவினா்கள் இத்தாக்குதலில் மேலும் சிலருக்கு தொடா்பு உள்ளதாகவும், அவா்களையும் கைது செய்ய வேண்டும் எனவும் கடையம் காவல் நிலையத்தில் புகாா் மனு அளித்துள்ளனா்.