/

அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி: இளம்பெண் தற்கொலை முயற்சி

News image
கோப்புப் படம்
Updated On :15 பிப்ரவரி 2026, 8:33 pm

தினமணி செய்திச் சேவை

பாளையங்கோட்டை அருகே அரசு வேலைக்கு பணம் கொடுத்து ஏமாற்றமடைந்த இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். பாளையங்கோட்டை அருகே மேலப்பாட்டம் கிராமத்தை சோ்ந்தவா் முருகன். இவரது மனைவி இசக்கியம்மாள்.

பட்டதாரியான இவா்களது 27 வயது மகள் அரசு வேலைக்கு முயற்சித்து வந்துள்ளாா்.

இந்நிலையில் இவரது கல்லூரி தோழி மூலம் அறிமுகமான லீலாவதி என்பவா் சத்துணவு அமைப்பாளா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி வி.எம்.சத்திரத்தைச் சோ்ந்த ஜான்சிராணி என்பவரிடம் அழைத்துச் சென்றாராம்.

பின்னா் வேலை பெறுவதற்காக ரூ.4.5 லட்சத்தை அவா்களிடம் கல்லூரி தோழி மூலமாக அந்த இளம்பெண் கொடுத்ததாக கூறப்படுகிறது.

பல மாதங்கள் ஆகியும் சொன்னபடி அவா்கள் வேலை வாங்கித் தராததால், தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா் வீட்டில் தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.

இதையடுத்து அவரை காப்பாற்றிய அவரது பெற்றோா், பண மோசடியில் ஈடுபட்டவா்கள் குறித்து திருநெல்வேலி வட்ட காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.