/

கூடங்குளம் அணு மின்நிலையம் பாதுகாப்பானதா?

 திருநெல்வேலி, அக். 2: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் கடல் பகுதியில் அன்னிய நாட்டு இழுவைக் கப்பல் ஒன்று புகுந்துள்ளது. மும்பை தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு நாட்டின் கடற்கரைப் பகுதி

News image
Updated On :26 டிசம்பர் 2023, 7:02 am

ப. இசக்கி

 திருநெல்வேலி, அக். 2: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் கடல் பகுதியில் அன்னிய நாட்டு இழுவைக் கப்பல் ஒன்று புகுந்துள்ளது. மும்பை தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு நாட்டின் கடற்கரைப் பகுதி உண்மையிலேயே பாதுகாக்கப்படுகிறதா என்ற கேள்வியை இந்த ஊடுருவல் எழுப்பியுள்ளது.

 அந்த இழுவைக் கப்பல் நங்கூரமிட்ட கடல் பகுதியில் இருந்து மேற்கே சுமார் 9 கடல் மைல் தொலைவில் உள்ள கூடங்குளத்தில்தான் நாட்டின் மிகப் பெரிய அணு மின் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 கத்தார் நாட்டு எண்ணெய் நிறுவனத்திற்கு சிங்கப்பூரில் இருந்து பணியாளர்களை ஏற்றிச் சென்ற அந்த இழுவைக் கப்பல், மோசமான வானிலை மற்றும் இயந்திரக் கோளாறு காரணமாக கரை ஒதுங்கியதாகக் கூறப்படுகிறது.

 கடந்த புதன்கிழமை முதல் அந்தக் கப்பல் ஒரே இடத்தில் நிற்பதைக் கண்ட உள்ளூர் மீனவர்கள் போலீஸôருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸôர் வெள்ளிக்கிழமை சென்று விசாரணை நடத்தியபோது, அந்தக் கப்பல் கடந்த 19 ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு வந்துள்ளதும், அதில் இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்த 10 பேர் இருப்பதும், அவர்கள் அனைவரும் எண்ணெய் நிறுவன ஊழியர்கள் என்பதும் தெரிய வந்தது.

 மும்பையில் கடல் பகுதியாக வந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தால் இந்தியக் கடல் பகுதிக்குள் புகுந்த அன்னிய நாட்டுக் கப்பல் குறித்து 2 நாள்களுக்கு பிறகுதான் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் தெரியவருமா என்பது போன்ற கேள்விகள் எழத்தான் செய்கின்றன.

 ரஷ்ய நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன் கூடங்குளத்தில் சுமார் ரூ.13,000 கோடி செலவில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 2 அணு உலைகளை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முதலாவது பிரிவில் விரைவில் மின் உற்பத்தி தொடங்க உள்ளது.

 கூடங்குளத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவில் உள்ள சர்வதேசக் கடல் பகுதி வழியாகத்தான் அந்தக் கப்பல் பயணித்திருக்க வேண்டும். ஆனால் அதைத் தாண்டி 3 கடல் மைல் தொலைவு இந்தியக் கடல் பகுதிக்குள் நுழைந்துள்ளது.

 கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் வரை உள்ள கடல் பகுதியில் ஊடுருவல் இல்லாமல் கண்காணிக்க வேண்டியது தூத்துக்குடியில் உள்ள கடலோர பாதுகாப்புப் படையினரின் பணி. அதற்காக அவர்களுக்கு நாயக்தேவி, அகல்யாபாய் என்ற 2 சிறிய ரோந்து படகுகளும், வீரா என்ற அதிவேக ரோந்துப் படகும் உள்ளன.

 இந்தப் படகுகள் 24 மணி நேரமும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருவதாக அப்படையினர் கூறுவதுண்டு.

 ""கப்பல் குறித்து வியாழக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. வெள்ளிக்கிழமை காலையில் பாதுகாப்புப் படையின் ரோந்துப் படகு புறப்பட்டு பாதி வழியில் செல்லும்போது அந்தக் கப்பல் புறப்பட்டு சென்று விட்டதாக காவல்துறையினர் தெரிவித்து விட்டனர்'' என கடலோரப் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

 அந்தக் கப்பல் அங்கேயே நிற்பதை உள்ளூர் போலீஸôரும், மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீஸôரும் வெள்ளிக்கிழமை மாலை வரை உறுதி செய்ததோடு, இரவிலோ அல்லது சனிக்கிழமையோதான் அந்த கப்பல் புறப்பட்டுச் செல்லும் என்றும் தெரிவித்தனர். இந்தத் தகவல் கடலோர பாதுகாப்பு படையினருக்கு எட்டவில்லை என்றே தெரிகிறது.

 எனினும், அந்தக் கப்பல் இரவில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

 இச் சம்பவம், பாதுகாப்பு துறைகளுக்கு இடையே உள்ள தகவல் பரிமாற்ற இடைவெளியையே காட்டுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.