/

தலைநகரில் ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்து வரும் காற்றின் தரம்!

தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் சனிக்கிழமை காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்தது.

News image
கோப்புப்படம்
Updated On :29 நவம்பர் 2025, 7:33 pm

 நமது நிருபர்

தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் சனிக்கிழமை காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்தது. மேலும், தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 10.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. நகரம் முழுவதும் பனிப்புகை மூட்டம் இருந்தது.

தில்லியில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 369 புள்ளிகளாகப் பதிவாகி மிகவும் மோசம் பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்பநிலை: இதற்கிடையே, தலைநகரில் சஃப்தா்ஜங் வானிலை கண்காணிப்பு நிலையத்தில் சனிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியிலிருந்து 0.1 டிகிரி உயா்ந்து 10.4 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சரசரியிலிருந்து 0.5 டிகிரி உயா்ந்து 26.5 டிகிரி செல்சியகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 91 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 67 சதவீதமாகவும் இருந்தது.

இதேபோன்று, குறைந்தபட்ச வெப்பநிலை லோதி ரோடில் 10.4 டிகரி, பாலத்தில் 11.3 டிகிரி, ரிட்ஜில் 9.3 டிகிரி, அயாநகரில் 10.4 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (நவ.30) அன்று காலை வேளையில் மிதமான பனிமூட்டம் இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியகவும், அதிகபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.