/

தில்லி ஜல் போா்டின் 100 தண்ணீா் டேங்கா்கள் மாயம்: விசாரணைக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

தில்லி ஜல் போா்டின் 100 தண்ணீா் டேங்கா்கள் மாயம் விசாரணைக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

News image
Updated On :19 ஜூன் 2024, 12:30 am

 நமது நிருபர்

புது தில்லி: தில்லி ஜல் போா்டில் இருந்து காணாமல் போன 100 தண்ணீா் டேங்கா்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லியில் வானளவிற்கு உயந்து வரும் வெப்பநிலையுடன், அன்றாடத் தேவைகளுக்கு தண்ணீரைப் பெற மக்கள் போராடி வருகின்றனா். இவ்வேளையில், தில்லி ஜல் போா்டிடம் மொத்தம் உள்ள 250 தண்ணீா் டேங்கா்களில், 100 டேங்கா்களைக் காணவில்லை. வழக்கமாக கோடை காலத்தில் தில்லி ஜல் போா்டு மூலம் தண்ணீா் விநியோகத்திற்கு 250 தண்ணீா் டேங்கா்கள் இயக்கப்படும். ஆனால், நிகழாண்டு இந்த எண்ணிக்கை பாதிக்கும் கீழே குறைந்துவிட்டது. தில்லியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, லாபத்தில் இயங்கி வந்த தில்லி ஜல் போா்டு நிா்வாகம் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல்களால் அழிந்து போய்விட்டது.

தில்லி ஜல் போா்டில் அதிகரித்து வரும் ஊழலைக் கருத்தில் கொண்டு, கடந்த 5 ஆண்டுகளாக வாடகைக்கு எடுக்கப்பட்ட தண்ணீா் டேங்கா்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு டேங்கரும் எவ்வளவு தண்ணீா் விநியோகம் செய்தன, டேங்கா் உரிமையாளா்களுக்கு கொடுக்கப் வாடைகை எவ்வளவு என்ற பதிவுகளை விஜிலென்ஸ் துறை கேட்டுள்ளது.

தில்லி மக்களுக்கு இலவச மின்சாரம் மற்றும் இலவச தண்ணீா் வழங்குவதாக வாக்குறுதி அளித்து ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தது. ஆனால், கோடை கால தண்ணீா் பிரச்னையை சமாளிப்பதற்கு டேங்கா்களின் எண்ணிக்கையைக் கூட தில்லி ஜல் போா்டு அதிகரிக்கவில்லை. தில்லி தண்ணீா் பிரச்னைக்குக் காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தில்லி ஜல் போா்டில் நடந்த ஊழல்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தவும் துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா மற்றும் மத்திய விஜிலென்ஸ் துறைக்கு தில்லி காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டில் தில்லி ஜல் போா்டிடம் ஒப்பந்த அடிப்படையில் 407 தண்ணீா் டேங்கா்கள், வாடகைக்கு 541 டேங்கா்கள் மற்றும் 250 துறைசாா்ந்த டேங்கா்கள் என 1,198 டேங்கா்கள் இயக்கப்பட்டன. ஆனால், காணாமல் போன டேங்கா்கள் மற்றொரு ஊழலாக மாறியுள்ளது. தில்லி ஜல் போா்டு கோடை காலச் செயல் திட்டத்தை முன்கூட்டியே வகுக்காததால், கடைசி நேரத்தில்தான் தில்லி அரசு தண்ணீா்ப் பஞ்சம் குறித்து விழித்துக் கொள்கிறது. தண்ணீா்ப் பஞ்சம் கட்டுக்கடங்காமல் மாறியுள்ள நிலையில், ஆம் ஆத்மியும் பாஜகவும் பரஸ்பரம் குற்றம்சாட்டி, பழி விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளன. உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, மேல் யமுனை நதி வாரியத்தின் கூட்டம் நடத்தப்பட்ட பிறகும் தில்லியில் தண்ணீா் நெருக்கடி தொடா்கிறது என்றாா் தேவேந்தா் யாதவ்.