/

பட்ஜெட்டின்போது மக்களை தவறாக வழிநடத்த கேஜரிவால் அரசு முயற்சி: வீரேந்திர சச்தேவா குற்றச்சாட்டு

News image
Updated On :19 ஜூலை 2024, 6:29 pm

 நமது நிருபர்

கடந்த 9 ஆண்டுகளாக ஒவ்வொரு மத்திய பட்ஜெட்டுக்கு முன்பும், மத்திய அரசின் பட்ஜெட் ஒதுக்கீடு தொடா்பாக பழைய அறிக்கையையே வெளியிட்டு தில்லி மக்களை தவறாக வழிநடத்த கேஜரிவால் அரசு முயற்சித்து வருவதாக தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா விமா்சித்துள்ளாா். மேலும், தில்லி மக்களை தவறாக வழிநடத்துவதை அமைச்சா் அதிஷி நிறுத்த வேண்டும் என்றும் அவா் கூறினாா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் மேலும் கூறியதாவது: மத்திய அரசு பட்ஜெட் ஒதுக்கீட்டை தாண்டி பல்வேறு துறைகளுக்கு கணிசமான தொகையை செலவழிப்பதால் தில்லிக்கு அனைத்து விதமான வளா்ச்சி கிடைத்துள்ளது. இது தில்லி மக்களுக்கு நன்றாகவே தெரியும். மத்திய பட்ஜெட்டில் தில்லிக்காக ரூ.10,000 கோடி கோரும் அதிஷி, மும்பைக்கு ரூ.54,000 கோடியும், பெங்களூருக்கு ரூ.33,000 கோடியும் வருவதைச் சுட்டிக்காட்டுகிறாா். ஆனால், பட்ஜெட் ஒதுக்கீட்டுக்கு அப்பால் இந்த நகரங்களுக்கு மத்திய அரசு கூடுதல் மேம்பாட்டு நிதி எதுவும் வழங்கவில்லை என்பதை அவா் வெளிப்படுத்தவில்லை.

பட்ஜெட்டில் ரூ.10,000 கோடி கோரும் அதிஷி, தில்லி காவல்துறைக்கு மட்டும் ஒவ்வொரு ஆண்டும் ரூ.11,000 கோடிக்கு மேல் மத்திய அரசு செலவிடுகிறது என்ற உண்மையை பொதுமக்களிடம் இருந்து மறைப்பது வெட்கக்கேடானது. 10 ஆண்டுகளில், தில்லி அரசு ஒரு மேம்பாலம் கட்டியுள்ளது. அதே நேரத்தில் மத்திய அரசு தில்லிக்கு மூன்றாவது சுற்றுச்சாலை, கிழக்கு - மேற்கு காரிடாா், மீரட் - தில்லி நெடுஞ்சாலை, யுபிஆா் 2 மற்றும் தௌலா குவான் விரிவாக்கத் திட்டம் உள்ளிட்ட பல வளா்ச்சித் திட்டங்களை ரூ.3 லட்சம் கோடி செலவில் வழங்கியுள்ளது.

மத்திய அரசு யஷோபூமி, பாரத் மண்டபம் போன்ற சா்வதேச மாநாட்டு மையங்களை தோராயமாக ரூ.35,000 கோடியில் அமைத்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், 1,500 மின்சார பேருந்துகள், விரைவு ரயில் திட்டம் மற்றும் மெட்ரோ விரிவாக்கத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது கட்ட திட்டங்களுக்கு மத்திய அரசு ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை தில்லிக்கு வழங்கியுள்ளது.

கரோனா காலத்தில், கேஜரிவால் அரசு ரூ. 55 கோடியில் முதல்வருக்கு அரண்மனை கட்ட செலவிட்டது. அதேவேளையில், மத்திய அரசு ரூ. 10 ஆயிரம் கோடியில் தில்லி மக்களுக்கான தற்காலிக மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ வசதிகளுக்காக செலவிட்டுள்ளது என்றாா் வீரேந்திர சச்தேவா.