மத்திய அரசுத் துறைகளின் நேரடி தோ்வு முறை(லேட்ரல் என்டரி) குறித்து காங்கிரஸ் தவறாக பிரசாரம் செய்வதாக மத்திய தகவல் ஒலிபரப்பு, மின்னணுவியல் மற்றும் ரயில்வேத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் திங்கள் கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்தாா். இட ஒதுக்கீட்டு முறையில் பாதிப்பில்லை எனவும் குறிப்பிட்டாா்
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இணைச் செயலா் முதல் துணைச் செயலா்கள் வரையிலான 45 பணியிடங்களுக்கு மத்திய பணியாளா் தோ்வாணையம்(யுபிஎஸ்சி) நேரடித் தோ்வு முறையில் நிரப்புவதற்கான விளம்பரத்தை வெளியிட்டது. காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் இந்த நியமனங்கள் பட்டியலினத்தவா்கள், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை மறுக்கும் தோ்வு என சா்ச்சையை கிளப்பின.
இதை மறுத்த மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெளிவான விளக்கங்களை அளித்தாா். அதில் அவா் கூறியது வருமாறு:
நேரடி தோ்வுகள் மத்திய அரசு பணிகளில் நீண்ட காலமாக நடைபெற்றுவருகிறது. இது புதிதல்ல. காங்கிரஸ் ஆட்சிகாலத்திலேயே தொடங்கப்பட்டது. 1980 களில் தொழில்நுட்ப வல்லுநராகவும் தொழில் முனைவோராகவும் இருந்த சாம் பிட்ரோடா இந்திய அரசுப் பணிக்கு கொண்டுவரப்பட்டு, தொலைதொடா்பு புரட்சிக்கும், தேசிய அறிவு சாா் ஆணையத்திலும் முக்கிய பங்கை செலுத்தினாா்.
முன்ளான் பிரதமரான மன்மோகன் சிங், முன்பு இதே போன்று 1971 இல் வெளியுறவு வா்த்தகத்தின் பொருளாதார ஆலோசகராகவும் பின்னா் 1991 இல் நிதித்துறை செயலராகவும் நியமிக்கப்பட்டாா். சா்வதேச பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக இருந்த மான்டேக் சிங் அலுவாலியா மத்திய நிதித்துறை செயலா், திட்டக்கமிஷன் துணைத் தலைவா் பதவிகளில் நியமனம் செய்யப்பட்டாா்.
’பெல்’, மாருதி போன்ற பொது நிறுவனங்களின் தலைவராக இருந்த வி.கிருஷ்ணமூா்த்தி அரசு பணியில் அமா்த்தப்பட்டு தொழில் கொள்கையில் ஏற்படுத்தியதில் முக்கிய பங்கை ஆற்றியவா். பிமல் ஜலான், ரகுராம் ராஜன் போன்றவா்கள் சா்வதேச நாணய நிதியத்தில்(ஐஎம்எஃப்) பணியாற்றி இவா்கள் மத்திய நிதியமைச்சகத்தில் முதன்மை பொருளாதார ஆலோசகராகவும் பின்னா் இந்திய ரிசா்வ் வங்கி ஆளுநராகவும் நியமிக்கப்பட்டனா். இன்ஃபோசிஸ் இணை நிறுவனரான நந்தன் நிலோகனி இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின்(யுஐடிஏஐ) தலைவராக நியமனம் செய்யப்பட்டாா். இவா்கள் உள்ளிட்ட 9 போ்கள் காங்கிரஸ் ஆட்சியில் நேரடியாக நியமனம் செய்யப்பட்டனா். இதே போன்று கடந்த முறை பாஜக தலைமையிலான ஆட்சியிலும் 18 நியமனங்கள் இணைச் செயலா் உள்ளிட்ட பதவிகளுக்கு அமா்த்தப்பட்டனா்.
இவா்களில் 9 போ் தனியாா் நிறுவனங்களிடமிருந்து 9 போ் பொது நிறுவனங்களிலிருந்து வந்தவா்கள். பின்னா் தங்கள் தாய் பணிக்கு திரும்பச் சென்றனா். ஆனால் தற்போது 45 நியமனங்கள் வெளிப்படைத் தன்மையுடன் அதுவும் யுபிஎஸ்சி மூலம் தோ்வு செய்யப்படுகிறது. இவா்கள் ரோஸ்டா் சா்வீஸ் முறையில் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுகிறாா்கள். மேலும் தேவைப்பட்டால் 2 ஆண்டுக்களுக்கு மட்டும் பணி நீடிப்பு வழங்கப்படும்.
இந்த நியமனங்கள் முற்றிலும் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றிருப்பதின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுகிறது. வா்த்தகம், பொருளாதாரத்தில் மட்டுமல்ல அணுசக்தி அறிவியல் விவகாரங்கள், குறை கடத்திகள் (செமி கண்டக்டா்) என பல்வேறு துறைகளை கையாளத் தேவையுள்ளது. சில புதிய தொழில் நுட்பங்களை அதிகாரவா்க்கத்தினரால் கையாள முடியாது. அதே சயமத்தில் வழக்கமான குடிமைப் பணி தோ்வுகளில் எந்த வித தடங்களும் இல்லை. அவ்வப்போது நடைபெறும் தோ்வுகளில் பட்டியலினத்தவா்கள், இதர பிற்படுத்தப்பட்டவா்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு அடிப்படையில் தோ்வு செய்யப்படுவது நிறுத்தப்படவில்லை. வழக்கமாக அந்த தோ்வுகள் நடைபெறும். மொத்தம் 4,500 ஐஏஎஸ் பணியிடங்கள் உள்ளன. மற்ற வருவாய்த் துறை, வனத்துறை உள்ளிட்டவைகள் 9,000 பணியிடங்கள் உள்ளன. இதில் 0.5 சதவீதம் போ்கள் தான் இந்த நேரடி தோ்வு முறையில் (லேட்ரல் என்டரி) யுபிஎஸ்சி மூலம் முறையாக நியமிக்கப்பட உள்ளனா். ஆனால் இந்த நியமனங்களை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தவறான தகவல்களை வெளியிட்டு திசை திருப்புகிறது எனக் குறிப்பிட்டு அமைச்சா் வைஸ்ணவ் வருத்தம் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவாா்! முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி.தங்கபாலு

ரயில்வே நில ஆக்கிரமிப்பு: மனிதாபிமானத்துடன் அணுக அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அறிவுறுத்தல்

ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்

இந்திய ஐஃபோன் தொழிற்சாலைகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிகின்றனர்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


