நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
/

வகைப்படுத்தப்படாத வனப் பகுதிகளின் நிலவரத்தைதெரிவிக்க டிடிஏ, எம்சிடிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ), தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி), தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி), தில்லி பொதுப்பணித் துறை ( பிடபிள்யூடி) உள்ளிட்ட

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:02 am

 நமது நிருபர்

தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ), தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி), தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி), தில்லி பொதுப்பணித் துறை ( பிடபிள்யூடி) உள்ளிட்ட பல அமைப்புகளின் அதிகாரிகள் தங்கள் அதிகார வரம்பிற்குள் உள்ள வகைப்படுத்தப்படாத காடுகளின் நிலவரம் குறித்த தகவல்களை அளிக்குமாறு தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை கேட்டுக் கொண்டுள்ளது.

1997-இல் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், இந்த ‘வகைப்படுத்தப்படாத காடுகள்‘ தொடா்பான விவரங்களை உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரிகள் அளித்துள்ளதைக் குறிப்பிட்டு, அவற்றின் நிலவரம் குறித்த தகவல்களை வனத் துறையிடம் தெரிவிக்குமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதி ஜஸ்மீத் சிங், ‘டிடிஏ, எம்சிடி, வடக்கு ரயில்வே, நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு, பிடபிள்யூடி, என்டிஎம்சி, எல் அண்ட் டிஓ

உள்ளிட்டவை வனம் மற்றும் வனவிலங்குத் துறையால் கோரப்பட்ட தேவையான தகவல்களை ஒரு வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும். அனைத்துத் தகவல்களையும் பெற்றுக் கொண்ட பிறகு, நீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரத்தை வனத்துறை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

தேசியத் தலைநகரில் பசுமையை பாதுகாப்பது குறித்த மனுவை விசாரித்த நீதிமன்றம், விகாஸ் மாா்க்கில் பல மரங்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு ஈடுசெய்யும் காடு வளா்ப்பின் நிலை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டது. ‘சுற்றுச்சூழலுக்கு சேதம் விளைவிக்கும் விஷயத்தில் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது. வளா்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் இடையில் சமநிலை இருக்க வேண்டும்’ என்று கூறிய நீதிமன்றம், சட்டத்தின்படி அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியது.

‘விகாஸ் மாா்க்கில் 82 மரங்கள் சேதப்படுத்தப்பட்டதற்கு 820 மரங்களை நடுவது தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த பிரமாணப் பத்திரத்தை எதிா்மனுதாரா் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று நீதிமன்றம் கூறியது. மனுதாரரின் வழக்குரைஞா் ஆதித்யா பிரசாத் பரிந்துரைத்தபடி, மரக்கன்றுகள் நடுவது தொடா்பான உத்தரவுகளைக் கடைப்பிடிப்பதை கண்காணிக்க நிரந்தர குழுவை அமைப்பது குறித்து அறிவுறுத்துமாறு தில்லி அரசு வழக்ககுரைஞரை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

முன்னதாக, மரம் வளா்ப்பு தொடா்பான மற்றொரு மனுவை விசாரித்த நீதிமன்றம், தேசியத் தலைநகரில் அதிக பசுமை பரப்பின் அவசியத்தை வலியுறுத்தி, மேட்டுப் பகுதி தவிர மற்றொரு வனப் பகுதியை உருவாக்க நிலத்தை கண்டறியுமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டது. இந்த வழக்கு வரும் அக்டோபா் மாதம் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.