நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
/

தில்லியில் விரைவில் மொஹல்லா பேருந்து திட்டம்

தில்லி அரசின் ‘மொஹல்லா’ பேருந்துத் திட்டம் அடுத்த சில மாதங்களுக்குள் தொடங்கப்படும் என்றும் இந்த வாரத்திற்குள் மின்சாரப் பேருந்துகளை வாங்குவதற்கான

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:02 am

 நமது நிருபர்

தில்லி அரசின் ‘மொஹல்லா’ பேருந்துத் திட்டம் அடுத்த சில மாதங்களுக்குள் தொடங்கப்படும் என்றும் இந்த வாரத்திற்குள் மின்சாரப் பேருந்துகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் அரசு கையெழுத்திடவுள்ளது என்றும் அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக அந்த அதிகாரி மேலும் கூறியதாவது:தில்லி அரசின் 2023-2024-ஆம் ஆண்டிற்காண நிதிநிலை அறிக்கையில் ‘மொஹல்லா’ பேருந்துத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் 9 மீட்டா் அகலம் கொண்ட மின்சாரப் பேருந்துகளை நகரத்தின் குறுகலான மற்றும் நெரிசல் மிகுந்த பகுதிகளில் இயக்கி, அனைத்து கடைக்கோடி பகுதிகளிலும் பேருந்து சேவையை உறுதி செய்வதாகும். இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்தின் தொடக்கத்தில் மின்சாரப் பேருந்து உற்பத்தியாளா்களுடன் பேருந்துகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் அரசு கையெழுத்திடவுள்ளது. அடுத்ததாக அந்தப் பேருந்துகளை கொள்முதல் செய்ய மூன்று முதல் ஐந்து மாதங்கள் வரை ஆகும்.

அரவிந்த் கேஜரிவால் அரசு வழக்கமான 12 மீட்டா் பேருந்துகள் செல்ல முடியாத வழித்தடங்களில் சுமாா் 2,000 சிற்றுந்து பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளது. புதிய பேருந்து திட்டத்தின் வழித்தடங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து முடிவு செய்வதற்காக கடந்த மே மாதம் போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட்டால் ஒரு தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டது. பொதுமக்களின் கருத்துகளின் அடிப்படையில், இந்தக் குழு வழித்தடத்தை ஆய்வு செய்து முடித்துள்ளது. இப்போது மக்கள் தொகை தரவு, சாலை உள்கட்டமைப்பு மற்றும் சாலைகளின் அகலத்தை கணக்கிட்டு வழித்தடங்களை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

மேலும், கடந்த வாரம் தனியாா் செய்தி நிறுவனத்திற்கு தில்லி அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் அளித்திருந்த பேட்டியில் கூறியிருப்பதாவது: போக்குவரத்து சேவையை நகரத்தின் அனைத்து கடைக்கோடிப் பகுதிகளிலும் உறுதி செய்வதில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பல கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

‘மொஹல்லா’ பேருந்துத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மக்களின் கருத்துகளை அறிகின்ற வகையில் பல்வேறுப் பகுதிகளில் பொதுக்கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் தில்லி மாநகராட்சி உறுப்பினா்களை நேரடியாக சந்தித்தும் ஆலோசனைகள் நடத்தப்படும். அதற்குப் பின்னா் மொஹல்லா பேருந்து சேவைக்கான வழிகளை இறுதி செய்வோம். மக்கள் எளிதாக தங்கள் இருப்பிடத்தில் இருந்து மெட்ரோ நிலையங்கள், சந்தைகள் அல்லது மருத்துவமனைகளை அடையும் வகையில் இந்தப் பேருந்துகள் இயக்கப்படும் என்று கைலாஷ் கெலாட் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.