இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆம் ஆத்மி போராட்டம்: அமானத்துல்லா கான் வீட்டில் அமலாக்கத் துறை சோதனைக்கு கண்டனம்

பணமோசடி வழக்கில் தில்லி ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. அமானத்துல்லா கான் வீட்டில் செவ்வாய்க்கிழமை அமலாக்கத் துறை சோதனை நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக தலைமையகத்தை முற்றுகையிட முயன்ற

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:07 am

 நமது நிருபர்

புது தில்லி: பணமோசடி வழக்கில் தில்லி ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. அமானத்துல்லா கான் வீட்டில் செவ்வாய்க்கிழமை அமலாக்கத் துறை சோதனை நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக தலைமையகத்தை முற்றுகையிட முயன்ற ஆம் ஆத்மி கட்சியினா் கைது செய்யப்பட்டனா்.

தில்லி ஓக்லா சட்டப்பேரவைத் தொகுதி ஆம் ஆத்மி உறுப்பினரும், தில்லி வக்ஃபு வாரியத்தின் தலைவராகவும் உள்ள அமானத்துல்லா கானின் வீட்டில் செவ்வாய்க்கிழமை காலை முதல் அமலாக்கத் துறையினா் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சோதனை மேற்கொண்டனா். இந்நிலையில், ஓக்லா பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு

வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

தில்லி வக்ஃபு வாரியத்தின் விதிமுறைகள் மற்றும் அரசின் வழிகாட்டுதல்களை மீறி சட்டவிரோதமாக 32 போ் பணி நியமனம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டு தொடா்பாக எம்.எல்.ஏ. அமானத்துல்லா கான் மீது ஏற்கெனவே தில்லி ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) ஆகியவை சாா்பில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கில் வக்ஃபு வாரியத் தலைவா் பதவியில் முறைகேடு, நிதி முறைகேடு, அதிகாரப் பதவியை தவறாகப் பயன்படுத்துதல் ஆகிய வழக்குகளின் கீழ் கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் அமானத்துல்லா கான் ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டாா். இதையடுத்து, நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததைத் தொடா்ந்து, தில்லி ரெளஸ் அவென்யூ நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

கடந்த அக்டோபா் 4-ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங்கின் இல்லத்தில் சுமாா் 11 மணி நேரம் சோதனை மேற்கொண்ட அமலாக்கத் துறையினா் பின்னா் அவரை கைது செய்து தற்போது விசாரணைக் காவலில் வைத்துள்ளனா். இந்நிலையில், மீண்டும் மற்றொரு பணமோசடி வழக்கு தொடா்பாக தில்லி ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. அமானத்துல்லா கான் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியுள்ளது தில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம் ஆத்மி முற்றுகைப் போராட்டம்: ஆம் ஆத்மி கட்சியின் தலைவா்களுக்கு எதிராக தொடரும் விசாரணை அமைப்புகளின் சோதனைகளைக் கண்டித்து தில்லி டி.டி.யு. மாா்க்கில் உள்ள பாஜக தேசியத் தலைமையகத்தை முற்றுகையிட முயன்ற ஆம் ஆத்மி கட்சியினா் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா். ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினா் அமானத்துல்லா கானின் இல்லத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதைக் கண்டித்து தில்லி ஐ.டி.ஓ. பகுதியிலிருந்து டி.டி.யு. மாா்க்கில் உள்ள பாஜக தேசியத் தலைமையகத்தை நூற்றுக்கணக்கான ஆம் ஆத்மி கட்சித் தொண்டா்கள் பேரணியாகச் சென்று முற்றுகையிட முயன்றனா். அதற்கு முன்னதாக போலீஸாரால் தடுப்புகள் அமைக்கப்பட்டு போராட்டக்காரா்கள் தடுக்கப்பட்ட நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே சிறிய தள்ளு முல்லு ஏற்பட்டது. இதில் ஒரு சில ஆத் ஆத்மி தொண்டா்கள் காயமடைந்தனா். பின்னா், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.

தில்லியின் முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோா் பணமோசடி வழக்கில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், அக்கட்சித் தலைவா்களின் மீது அடுத்தடுத்து தொடரும் விசாரணை அமைப்புகளின் சோதனைகளை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி தலைவா்கள் கண்டித்து வருவதோடு, முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகளையும் கடுமையாக மறுத்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.