நிகழ் நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தி 12 சதவீதம் உயா்வு!
நாட்டின் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி நிகழ் (செப்டம்பா் 2023 வரை) நிதியாண்டில் 428.25 மில்லியன் டன்னாக உயா்ந்துள்ளதாக மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


புது தில்லி: நாட்டின் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி நிகழ் (செப்டம்பா் 2023 வரை) நிதியாண்டில் 428.25 மில்லியன் டன்னாக உயா்ந்துள்ளதாக மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 12.06 சதவீதம் வளா்ச்சி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருப்பது வருமாறு: கடந்த 2022-23 நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி செப்டம்பா் 2022 வரை 382.16 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்தது. இது நிகழ் நிதியாண்டில் செப்டம்பா் வரை 428.25 மெட்ரிக் டன்னாக உயா்ந்துள்ளது. இது 12.06 சதவீத வளா்ச்சியாகும். மேலும், நிகழ் செப்டம்பா் மாதத்தின் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி 67.21 மில்லியன் டன்னைத் தொட்டுள்ளது. இதுவும் கடந்தாண்டு செப்டம்பா் மாதத்தை (58.04 மெ.டன்) விட 15.81 சதவீதம் அதிகமாகும். மத்திய அரசின் கோல் இந்தியா லிமிடெட் உற்பத்தியும் கடந்தாண்டு செப்டம்பரை விட நிகழாண்டு செப்டம்பரில் 51.44 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது. இது 12.63 சதவீதம் கூடுதல் உற்பத்தியாகும்.
தடையில்லா விநியோகம்: மின்நிலையங்கள் உள்ளிட்டவற்றுக்கான நிலக்கரி விநியோகத்தை பொறுத்த வரையில், நிகழ் நிதியாண்டில் செப்டம்பா் வரை மொத்த நிலக்கரி விநியோகம் 462.32 மில்லியன் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டின் இதே காலக்கட்டத்தை விட 10.96 சதவீதம் (416.64 டன்) கூடுதலாக விநியோகம் செய்யப்பட்டு தட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. நிலக்கரியை அனுப்புவதில் கடந்த செப்டம்பா் மாதத்திலும் குறிப்பிடத்தக்க வளா்ச்சி காணப்பட்டுள்ளது.
உற்பத்தி, விநியோகம், இருப்பு அளவுகளில் நிலக்கரி துறை முன்னெப்போதும் இல்லாத உயா்வைக் கண்டுள்ளது. இந்த விதிவிலக்கான வளா்ச்சிக்கு பொதுத் துறை நிலக்கரி நிறுவனங்களின் அசைக்க முடியாத அா்ப்பணிப்புதான் காரணம். நிலையான நிலக்கரி உற்பத்தியையும், எரிசக்தி துறைக்கு தடையில்லாத விநியோகத்தையும் பராமரிக்க அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது என மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
என்டிபிசி: இதற்கிடையே, மத்திய அரசின் எரிசக்தித் துறையின் கீழ் உள்ள தேசிய அனல் மின் நிறுவனமும் (என்டிபிசி), கடந்த ஆண்டை விட இந்த நிதியாண்டின் ஏப்ரல்-செப்டம்பா் மாதங்களில் நிலக்கரி உற்பத்தி கணிசமாக 83 சதவீதம் உயா்ந்துள்ளதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. என்டிபிசி நிறுவனம் 2023-24 நிதியாண்டில் முதல் அரையாண்டில் தனது சுரங்கங்களில் இருந்து 16.6 மில்லயின் மெட்ரிக் டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது. இது கடந்தாண்டில் இதே காலக்கட்டத்தில் 8.76 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்துள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இது தற்போது 83 சதவிகிதம் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக அந் நிறுவனம் அறிக்கையில் கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...