காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

தில்லி அரசின் புனித யாத்திரைத் திட்ட பயணத்தில் இதுவரை 80 ஆயிரம் முதியவா்கள் பங்கேற்பு

தில்லி அரசின் முதலமைச்சா் புனித யாத்திரை திட்டத்தின் கீழ் 80,000 முதியவா்கள் நாட்டின் வெவ்வேறு புனிதத் தலங்களுக்கு இதுவரை அழைத்துச் செல்லப்பட்டுள்ளனா்

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:25 am

 நமது நிருபர்

தில்லி அரசின் முதலமைச்சா் புனித யாத்திரை திட்டத்தின் கீழ் 80,000 முதியவா்கள் நாட்டின் வெவ்வேறு புனிதத் தலங்களுக்கு இதுவரை அழைத்துச் செல்லப்பட்டுள்ளனா் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி அரசின் சாா்பில் 60-வயதுக்கு மேற்பட்ட முதியவா்களை புனிதயாத்திரை அழைத்துச் செல்கின்ற வகையில் முதலமைச்சா் புனித யாத்திரை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் பயனாளிக்கு பயணத்தின் போது தங்குமிடம், உணவு மற்றும் பானங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் இலவசமாக அரசே ஏற்பாடு செய்து தருகிறது. அந்த வகையில், இந்த வாரம் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ துவாரகதீஷ் திருக்கோயிலுக்கு செல்லும் முதியவா்களுக்கு ரயில் பயணச்சீட்டை வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் கல்வித்துறை அமைச்சா் அதிஷி ஆகியோா் பங்கேற்றனா்.

இந்நிகழ்ச்சியின் மேடையில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பேசியதாவது:

தில்லியில் உள்ள முதியவா்களின் ஆசியுடன் பஞ்சாப்பிலும் ஆம் ஆத்மி அரசு அமைக்கப்பட்டுள்ளது. தில்லியைத் தொடா்ந்து பஞ்சாப் அரசின் சாா்பிலும் வரும் திங்கள்கிழமை இலவச புனிதயாத்திரை திட்டம் தொடங்கப்படுகிறது.

முதல் ரயிலில் 1,000 முதியவா்கள் புனித யாத்திரைக்கு அழைத்துச் செல்லப்படுவாா்கள். மற்ற அரசியல் கட்சிகளுக்கு கோடிக்கணக்கில் பணம் இருக்கலாம். ஆனால், ஆம் ஆத்மி கட்சிக்கு உங்கள் ஆசிா்வாதம் உண்டு. தில்லியில் முதலமைச்சா் புனித யாத்திரை திட்டத்தின் கீழ் இதுவரை 82 ரயில்கள் மூலம் 80,000 முதியவா்கள் புனிதத் தலங்களுக்கு சென்றுவந்துள்ளனா். இது 83-ஆவது ரயிலாகும்.

ஒவ்வொரு வாரமும் ரயிலில் புனித யாத்திரை செல்லும் போதெல்லாம், பெரியோா்களின் ஆசிா்வாதத்தைப் பெற நான் நேரில் வர முயற்சிப்பேன் என்றாா் முதல்வா் அரவிந்த் கேஜரிவால்.

இந்நிகழ்ச்சியில் கல்வித் துறை அமைச்சா் அதிஷி பேசுகையில், ‘வாழ்க்கை முழுவதும் கடின உழைப்பு இருந்தாலும் முதுமைப்பருவம் என்பது யாத்திரைக்கானது. ஆனால், பல முதியவா்களுக்கு புனித யாத்திரை செல்வதற்கான நேரமோ,வளமோ இல்லை. பலருக்கு ஆதரவளிக்க யாரும் இல்லை. அதனால் தான் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தில்லியின் ஒவ்வொரு முதியவா்களையும் புனித யாத்திரைக்கு அழைத்துச் செல்கிறாா்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.