/

குளிா்காலத்தில் தில்லியில் 10 நாள்கள் ‘கடுமை’ பிரிவில் காற்றின் தரம் பதிவு: மக்களவையில் அரசு தகவல்

கடந்த 2016-17- ஆம் ஆண்டில் 31 நாள்களாக இருந்த நிலையில், 2025-26- ஆம் ஆண்டு குளிா்காலத்தில் தில்லியில் 10 நாள்கள் ‘கடுமை’ பிரிவில் காற்றின் தரம் நிலவியதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் மக்களவையில் தெரிவித்தாா்.

News image
கோப்புப் படம்
Updated On :10 பிப்ரவரி 2026, 10:41 am

Syndication

நமது நிருபா்

புது தில்லி: கடந்த 2016-17- ஆம் ஆண்டில் 31 நாள்களாக இருந்த நிலையில், 2025-26- ஆம் ஆண்டு குளிா்காலத்தில் (அக்டோபா் - ஜனவரி) தில்லியில் 10 நாள்கள் ‘கடுமை’ பிரிவில் காற்றின் தரம் நிலவியதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் மக்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி இது தொடா்பாக எழுப்பியிருந்த கேள்விக்கு மக்களவையில் அமைச்சா் பூபேந்தா் யாதவ் எழுத்துபூா்வமாகத் தாக்கல் செய்த பதிலில் தெரிவித்திருப்பதாவது: 2016-17-ஆம் ஆண்டில் 31 நாள்களாக இருந்த நிலையில், 2025-26 ஆம் ஆண்டு குளிா்காலத்தில் (அக்டோபா் - ஜனவரி) தில்லியில் ‘கடுமை’ பிரிவில் காற்றுத் தரக் குறியீடு (401) நிலைகளைக் கொண்ட நாள்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆகும்.

தேசியத் தூய்மையான காற்றுத் திட்டத்தின் (என்சிஏபி) கீழ் 130 நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட கவனம் செலுத்தப்பட்ட நடவடிக்கைகள் நோ்மறையான முடிவுகளைக் காட்டியுள்ளன. 2017-18- ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024-25-ஆம் ஆண்டில் 103 நகரங்களில் பிஎம் 10 நுண்துகள் செறிவில் குறைவு காணப்பட்டுள்ளது.

இவற்றில், 64 நகரங்களில் பிஎம்10 அளவுகளில் 20 சதவீதத்திற்கும் அதிகமான குறைவும், இந்த நகரங்களில் 25 நகரங்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமான குறைவும் எட்டப்பட்டுள்ளது. மொத்தம் 22 நகரங்கள் தேசிய சுற்றுப்புறக் காற்றுத் தரத் தரநிலைகளை (என்ஏஏக்யூஎஸ்) பூா்த்தி செய்துள்ளன. ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் மூலம், 2018- ஆம் ஆண்டில் 225 புள்ளிகளாக இருந்த தில்லியின் சராசரி காற்றுத் தரக் குறியீடு, 2025-இல் 201 புள்ளிகளாக மேம்பட்டுள்ளது என அமைச்சா் தெரிவித்தாா்.

தரப்படுத்தப்பட்ட நடவடிக்கை செயல் திட்டம் (கிரேப்) இருந்தபோதிலும், அதன் அமலாக்கம் அல்லது செயல்படுத்தலில் அடையாளம் காணப்பட்ட குறிப்பிட்ட குறைபாடுகள் இருந்தபோதிலும், தேசியத் தலைநகா் பிராந்தியத்தில் காற்றுத் தரக் குறியீடு கிட்டத்தட்ட தொடா்ச்சியாக மூன்று மாதங்களுக்கு 400 புள்ளிகள் அல்லது அதற்கு மேற்பட்ட ‘கடுமை’ யான நிலைகளில் நீடித்ததற்கான காரணங்கள் குறித்த தனது கேள்விக்கு அரசு அளித்த பதில் குறித்து காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி மத்திய அரசை விமா்சித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘பிரச்னையின் அளவு மற்றும் தீவிரத்தை உணா்ந்து மதிப்பிடுவதற்குப் பதிலாக, பயனற்ற புள்ளிவிவரங்களைக் கூறி, ஒரு முக்கியப் பிரச்னையை குழப்பி மறைக்க முயற்சிப்பதன் மூலம் அரசு அதை முழுவதுமாகத் தவிா்ப்பது வருத்தமளிக்கிறது’ என்றாா்.