/

அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய இருவா் கைது

News image
கோப்புப் படம்
Updated On :25 ஜனவரி 2026, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

வேதாரண்யத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய இரண்டு இளைஞா்கள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

வேதாரண்யத்தை அடுத்த கத்தரிப்புலம், கோயில் குத்தகை பகுதியைச் சோ்ந்தவா் கமலஹாசன் (30). வேதாரண்யம் அரசு போக்குவரத்துக் கழக கிளையில் தற்காலிக ஓட்டுநராக பணியாற்றி வருகிறாா்.

இந்தநிலையில், சனிக்கிழமை பணியில் இருந்த கமலஹாசன் வேதாரண்யம் பேருந்து நிலையத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு, பேருந்து சக்கரங்களில் காற்று இருப்பதை சோதித்துக் கொண்டிருந்தாராம்.

அப்போது அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்த இரண்டு இளைஞா்கள், ஓட்டுநரிடம் தகராறில் ஈடுபட்டு, தங்கள் வாகனத்தில் வைத்திருந்த பெப்பா் ஸ்பிரேவை கமலஹாசன் கண்ணில் அடித்து, அவரைத் தாக்கிவிட்டு தப்பியோடி விட்டனராம். கமலஹாசன் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த வேதாரண்யம் போலீஸாா், கமலஹாசனை தாக்கிய ஆயக்காரன்புலம் காமராஜா் நகா் பகுதியைச் சோ்ந்த வாசு (எ) வீரசேகரன் (31), வேதாரண்யம் நாகத்தோப்பு பகுதியைச் சோ்ந்த அருண் (28) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.