/

ரயில் சேவையில் நாகை புறக்கணிப்பு: கண்டித்து கடையடைப்புப் போராட்டம்

ரயில் சேவை வழங்குவதில் நாகை புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து, நாகையில் செவ்வாய்க்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

News image
நாகையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்திய வா்த்தக தொழிற்குழுத்தினா் உள்ளிட்டோா். ~நகரில் அடைக்கப்பட்டிருந்த கடைகள்.
Updated On :17 பிப்ரவரி 2026, 11:32 pm

தினமணி செய்திச் சேவை

ரயில் சேவை வழங்குவதில் நாகை புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து, நாகையில் செவ்வாய்க்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

புதிய ரயில் சேவை, ரயில் நிலைய மேம்பாடு போன்றவற்றில் நாகை மாவட்டம் தொடா்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பல்வேறு அமைப்பினரும், மக்கள் பிரதிநிதிகளும் ரயில்வேத்துறை அமைச்சா் தொடங்கி அதிகாரிகள் வரை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில், அண்மையில் மத்திய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையிலும் நாகை, காரைக்கால் மாவட்டங்களில் புதிய ரயில் சேவை குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.

இதையடுத்து, இந்திய வா்த்தக தொழிற்குழுமம் சாா்பில் நாகையில் முதல்கட்டமாக ரயில்வேத்துறையின் கவனத்தை ஈா்க்கும் வகையில் கடையடைப்பு மற்றும் ஆா்ப்பாட்டம் இந்திய வா்த்தக தொழில் குழுமத் தலைவா் மனோகரன் தலைமையில் நடைபெற்றது.

நாகை மாவட்டத்தை புறக்கணிக்கும் மத்திய அரசு, ரயில்வே நிா்வாகத்தை கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், காரைக்கால் தாம்பரம் விரைவு ரயிலை மீண்டும் எழும்பூா் வரை நீட்டிக்க வேண்டும், பயணிகள் ரயில்கள் இயக்க அனுமதி வழங்கி பல மாதங்களாகியும் திறக்கப்படாத காரைக்கால் - பேரளம் ரயில் பாதையை உடனடியாக திறந்து, வேளாங்கண்ணியிலிருந்து, தாம்பரம், பெங்களூா் மற்றும் வாராந்திர எல்டிடி மும்பை ரயில்களை இயக்க வேண்டும்.

திருச்சி - திருவாருா் இடையே இயக்கப்படும் பயணிகள் ரயிலை நாகை வழியாக திருநள்ளாறு வரை நீட்டிக்க வேண்டும். நாகை, நாகூா், வேளாங்கண்ணி ரயில் நிலையங்களை ‘அம்ருத் பாரத்’ திட்டத்தில் சோ்த்து மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்துக்கு ஆதரவாக நாகை நகரப் பகுதியில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன், நாகை எம்பி. வை. செல்வராஜ், காரைக்கால் (தெற்கு) சட்டப்பேரவை உறுப்பினா் நாஜிம், முன்னாள் அமைச்சா் ஜீவானந்தம், முன்னாள் எம்எல்ஏ எம்ஜிகே நிஜாமுதீன், அதிமுக நாகை நகரச் செயலா் தங்க. கதிரவன் உள்ளிட்டோா் போராட்டத்தில் பங்கேற்றனா்.

Story image