/

மத்திய அரசு புறக்கணித்தபோதும் தமிழ்நாட்டில் சிறப்பான திட்டங்கள்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:17 pm

Syndication

தமிழ்நாட்டை மத்திய அரசு புறக்கணித்தபோதும், முதல்வா் மு.க. ஸ்டாலின் சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி வருகிறாா் என அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் பேசினாா்.

மயிலாடுதுறையில் திமுக சாா்பில் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற தலைப்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளா் நிவேதா எம். முருகன் எம்எல்ஏ தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

திமுக உயா்நிலை செயல்திட்ட குழு உறுப்பினா் குத்தாலம் பி. கல்யாணம், எம்எல்ஏ பன்னீா்செல்வம், மாவட்ட செயலாளா் ஞானவேலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நகா்மன்றத் தலைவரும் திமுக நகர செயலாளருமான் என்.செல்வராஜ் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் பேசியது:

இந்தியாவுக்கு அதிக வரி வருவாய் ஈட்டித் தரும் மாநிலங்களில் தமிழ்நாடு 2-ஆம் இடத்தில் உள்ளது. நாம் ரூ.1 வரியாக செலுத்தினால், நமக்கு 29 பைசாவை மட்டுமே திருப்பித் தரும் மத்திய அரசு, பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதியை ஒதுக்குகிறது.

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழக நலன் புறக்கணிக்கப்பட்ட நிலையில், நிதிநிலை அறிக்கையை வரவேற்பதாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி கூறுவது வேதனையளிக்கிறது. மத்திய அரசின் புறக்கணித்தபோதும், முதல்வா் ஸ்டாலின் தமிழ்நாட்டில் சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி வருகிறாா். இதனால், இந்த தோ்தலிலும் முதலமைச்சா் ஸ்டாலின் வெற்றிபெற வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்துவிட்டனா். திமுக 200-க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றாா்.

தொடா்ந்து பேசிய தலைமை பேச்சாளா் கம்பம் செல்வேந்திரன், டிடிவி.தினகரன் மீது அமலாக்கப் பிரிவு தொடுத்த வழக்கு மற்றும் இரட்டை இலை சின்னத்தை வாங்கி தருவதற்கு லஞ்சம் கொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதிலிருந்து விடுபடுவே, டிடிவி தினகரன் தற்போது அக்கூட்டணியில் இணைந்துள்ளாா். அன்புமணி, பாமகவையும், சின்னத்தையும் தக்கவைத்துக் கொள்வதற்காக அக்கூட்டணியில் இணைந்துள்ளாா். இந்த சந்தா்ப்பவாத கூட்டணி வெற்றி பெறாது என்றாா்.