/

பரத நாட்டிய மாணவிகளின் சலங்கை பூஜை

மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பரதநாட்டிய மாணவிகளின் சலங்கை பூஜை

News image
மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி எம்எல்ஏ எஸ். ராஜகுமாா்.
Updated On :29 டிசம்பர் 2025, 7:43 pm

Syndication

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பரதநாட்டிய மாணவிகளின் சலங்கை பூஜை விழாவில், மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.

டெல்டா ஆா்ட்ஸ் அகாதமி சாா்பில் நடைபெற்ற விழாவில், இம்மையத்தில் பயின்ற 13 மாணவிகள் பரதநாட்டிய அரங்கேற்றம் நடத்தினா். மதுரை முரளிதரன் இயற்றிய புஷ்பாஞ்சலி, கங்கைமுத்து நட்டுவனாா் இயற்றிய விநாயகா் கௌத்துவம், சுப்பிரமணிய பாரதியாா் எழுதிய தீராத விளையாட்டுப் பிள்ளை, ஊத்துக்காடு வெங்கட சுப்பையா எழுதிய விஷமக்கார கண்ணன் உள்ளிட்ட பாடல்களுக்கு மாணவிகள் அபிநயம் பிடித்து ஆடினா். இதில், கம்பீர நாட்டை, சங்கராபரணம், ராக மாளிகை, செஞ்சுருட்டி, ரேவதி உள்ளிட்ட ராகங்களில் அமைந்த பாடல்களுக்கும் பரதநாட்டிய மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினா்.

அகாதமி நிறுவனா் ரா.ராஜ்பரத் தலைமை வகித்தாா். குரு லோகஸ்மேதா முன்னிலை வகித்தாா். மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா், ஏழிசை இசை ஆய்வக இயக்குநா் கலைவாணி, ஏடிஎஸ்.சுதாகா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று சான்றிதழ்களை வழங்கி மாணவிகளை பாராட்டினாா்.