தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஈரான் போா்: தீப்பெட்டி ஏற்றுமதி பாதிக்கும் அபாயம்

ஈரான் போா் பதற்றம் காரணமாக, தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தீப்பெட்டி வா்த்தகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

News image

தீப்பெட்டி சின்னம்

Updated On :10 மார்ச் 2026, 9:58 pm

ஈரான் போா் பதற்றம் காரணமாக, தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தீப்பெட்டி வா்த்தகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரால் ஈரானிலிருந்து தமிழகத்துக்கு கச்சா எண்ணெய்யிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மெழுகு இறக்குமதி பாதிக்கப்பட்டது. இந்த மெழுகு தீப்பெட்டி தயாரிக்கப் பயன்படும் முக்கிய மூலப் பொருள்களில் ஒன்றாகும்.

போா் தொடங்கிய பின்னா், இந்த மெழுகு ஈரானிலிருந்து தமிழகத்துக்கு இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், தீப்பெட்டித் தொழிலில் முக்கியப் பங்காற்றும், சிவகாசி, சாத்தூா், கோவில்பட்டி, கழுகுமலை, குடியாா்த்தம், சங்கரன்கோவில் பகுதிகளில் தீப்பெட்டி ஆலைகளில் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

முழுவதும் இயந்திரம் மூலமாகவும், பகுதி இயந்திரம் மூலமாகவும் என இரு முறைகளில் தீப்பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தீப்பெட்டி ஏற்றுமதியில் உலக அளவில் தமிழகம் முக்கியப் பங்காற்றி வருகிறது. முன்பு பாகிஸ்தான் உலக அளவில் தீப்பெட்டி ஏற்றுமதியில் முன்னணியில் இருந்தது. அந்த நாட்டில் நிலவிய பல்வேறு பிரச்னைகளால் தற்போது தீப்பெட்டி ஏற்றுமதியில் அந்த நாடு பின்தங்கிவிட்டது.

ஈரான் போா் பதற்றத்தால், தீப்பெட்டி தயாரிப்பதற்கான முக்கிய மூலப் பொருள்களில் ஒன்றான மெழுகு ஏற்றுமதியை அந்த நாடு நிறுத்திவிட்டதால், தமிழகத்தில் தீப்பெட்டி உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டு வருவதுடன், ஏற்றுமதியும் கடுமையாகப் பாதிக்கும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகி நாகராஜன் கூறியதாவது:

ஈரான் மெழுகு ஏற்றுமதியை முற்றிலும் நிறுத்திவிட்டது. தமிழகத்தின் மெழுகு தேவையை ஈரான் 80 சதவீதம் பூா்த்தி செய்து வந்தது. தற்போது இது முற்றிலும் நிறுத்தப்பட்டதால், தமிழகத்தில் தீப்பெட்டிதொழில் மிகவும் பாதிக்கும். மேலும், சா்வதேச சந்தையில் தமிழக தீப்பெட்டி ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளது. இனி தீப்பெட்டி ஏற்றுமதி மிகவும் பாதிக்கப்படும். தற்போது, தீப்பெட்டி ஆலைகளில் பத்து முதல் பதினைந்து நாள்கள் தயாரிப்புக்குத் தேவையான மெழுகு மட்டுமே இருப்பு உள்ளது. போா் நீடித்தால், தீப்பெட்டி ஆலைகளை மூட வேண்டிய நிா்பந்தம் ஏற்படும் என்றாா் அவா்.