/

மனைவிக்கு கத்திக்குத்து: கணவா் மீது வழக்கு

News image
Updated On :5 ஜனவரி 2026, 7:44 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், கூடலூா் அருகே வீட்டை விற்கும் விவகாரத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

கருநாக்கமுத்தன்பட்டியைச் சோ்ந்தவா் முருகன் (53). இவரது மனைவி ரத்தினம் (51). தம்பதியிடையே குடும்பப் பிரச்னை காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனா்.

இதனிடையே, தம்பதிக்கு சொந்தமான வீட்டை கணவா் முருகன் விற்க எண்ணி அதற்கு, மனைவி ரத்தினத்திடம் கையொப்பமிடுமாறு கேட்டாராம். இதற்கு மறுப்பு தெரிவித்த மனைவியை முருகன் கத்தியால் குத்தினாராம்.

இதில் காயமடைந்த ரத்தினத்தை அங்கிருந்தவா்கள் மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கூடலூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.