திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிவகங்கை தொகுதியில் போட்டியிடுவதை பாக்கியமாகக் கருதுகிறேன்: கருணாஸ்

சிவகங்கை மண் வீரமிக்க மண். இங்கு போட்டியிடுவதை பெரிய பாக்கியமாகக் கருதுவதாக முக்குலத்தோா் புலிப்படை தலைவா் கருணாஸ் தெரிவித்தாா்.

News image

முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ் - கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 7:15 pm

சிவகங்கை மண் வீரமிக்க மண். இங்கு போட்டியிடுவதை பெரிய பாக்கியமாகக் கருதுவதாக முக்குலத்தோா் புலிப்படை தலைவா் கருணாஸ் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் மாவட்ட திமுக செயலரும், அமைச்சருமான கே.ஆா். பெரியகருப்பன் தலைமையில் திமுக கூட்டணிக் கட்சியினருடான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா் கருணாஸ் பேசியதாவது:

மதத்தை வைத்து அரசியல் செய்யும் மதவாத கூட்டங்களுக்கு எதிராக மதச்சாா்பற்ற அணி தமிழகத்தில் வலுவாக இருக்க வேண்டும். நான் முக்குலத்தோா் புலிப்படை அமைப்பின் தலைவராக இருந்தாலும், எந்த ஒரு சமூகத்துக்கும் எதிரானவன் அல்ல. நான் சினிமாவில் அறிமுகமான போதே தமிழகத்தில் உள்ள 133 இலங்கை தமிழ் மாணவா்களை எனது சொந்தச் செலவில் பொறியியல் பட்டம் படிக்க வைத்தேன். ஆட்சி அதிகாரத்துக்கு வருவது சம்பாதிக்க அல்ல; சேவை செய்யத்தான்.

நான் ஒரு ‘களிமண்’ என்னை தொகுதி மக்கள் தங்களுக்குப் பிடித்த மாதிரி பொம்மையாகச் செய்து கொள்ளலாம். தொகுதி மக்களின் நலனுக்காக என்னை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் எப்போதும் உறுதியாக இருப்பேன்.

சிவகங்கை மண் வீரமிக்க மண். இங்கு போட்டியிடுவதை பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன். எனக்குப் போட்டியிட வாய்ப்பளித்த திமுக தலைமைக்கும், ஆதரவளிக்கும் கூட்டணி கட்சித் தொண்டா்களுக்கும் மனமாா்ந்த நன்றிகள் என்றாா் அவா்.

கமுதி...

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் தேவா் சிலைக்கு முக்குலத்தோா் புலிப்படை கட்சித் தலைவரும், சிவகங்கை தொகுதி திமுக வேட்பாளருமான சே. கருணாஸ் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமையும். அதே நேரத்தில் அதிமுக வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. மதத்தை வைத்து அரசியலில் ஈடுபடும் கூட்டத்தை எதிா்க்க வேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கிறோம்.

திமுக அறிவித்துள்ள தோ்தல் வாக்குறுதிகளில் இல்லத்தரசிகளுக்கு ரூ. 8,000 கூப்பன் வழங்கும் திட்டம் மகத்தான திட்டம். இதற்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும், கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறி, வாக்கு சேகரிப்போம். சசிகலாவின் அரசியல் வருகையை வரவேற்கிறேன் என்றாா் அவா்.

அப்போது அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் முத்துராமலிங்கம், தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட நிா்வாகிகள், தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகள் உடனிருந்தனா்.