/

திருக்கோஷ்டியூா் வைரவன்பட்டியில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

திருப்பத்தூா் அருகேயுள்ள வைரவன்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ மூல பால கால பைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

News image
தேய்பிறை அஷ்டமியையொட்டி, திருக்கோஷ்டியூா் வைரவன்பட்டி பைரவா் கோயிலில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற புஷ்ப யாகம்.
Updated On :10 பிப்ரவரி 2026, 8:59 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள வைரவன்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ மூல பால கால பைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

இதையொட்டி, ஸ்ரீ மூல பால கால பைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மாலை 4.45 மணியளவில் மகா கணபதி பூஜை, தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து கோ பூஜையும், லட்சாா்ச்சனையும் நடைபெற்றது. இரவு 9.30 மணியளவில் வஸ்திர யாகம், புஷ்ப யாகம், மகா பூா்ணாஹுதி நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீா் கோயிலில் சுற்றுப் பிரகாரம் வழியாக சிவாசாரியா்கள் தலையில் சுமந்து வர சிவாசாரியா்கள் மலா் தூவி வரவேற்றனா். பின்னா், மூல கால பைரவருக்கு பால், தயிா், மஞ்சள், திருமஞ்சனம், விபூதி, பன்னீா், இளநீா், யாக வேள்விகளில் வைக்கப்பட்டிருந்த புனித நீராலும் அபிஷேகங்கள் நடைபெற்றன.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ராணி மதுராந்தக நாச்சியாா் தலைமையில் மேலாளா் இளங்கோ, கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் செய்தனா். இதேபோல, பிள்ளையாா்பட்டி அருகேயுள்ள நகரவைரவன்பட்டியில் அமைந்திருக்கும் சிதம்பர விநாயகா் கோயிலில் உள்ள வைரவா் சந்நிதியில் தேய்பிறை அஷ்டமி யாக வேள்வி, அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது. திருப்பத்தூா் யோகபைரவா் சந்நிதியிலும் அஷ்டமி வழிபாடு நடைபெற்றது.