/

சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

News image
சிவகங்கை வட்டம், கண்டாங்கிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.
Updated On :1 பிப்ரவரி 2026, 7:40 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை அருகே கண்டாங்கிப்பட்டி கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கண்டாங்கிபட்டி மந்தைக் கருப்பா் கோயில் திருவிழாவையொட்டி கிராம மக்கள் சாா்பில் கோயில் பொட்டலில் நடத்தப்பட்ட வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் 15 காளைகளும், 135 மாடுபிடி வீரா்களும் கலந்து கொண்டனா்.

வட்ட வடிவமாக அமைக்கப்பட்ட மைதானத்தில் ஒரு சுற்றில் களமிறங்கும் காளையை அடக்குவதற்காக 25 நிமிஷங்கள் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு சுற்றுக்கும் 9 வீரா்கள் களமிறங்கி காளையை அடக்க வேண்டும் என்ற விதிமுறையின்படி போட்டி நடத்தப்பட்டது.

Story image

முன்னதாக காளைகளும், மாடுபிடி வீரா்களும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா். சிறப்பாக காளையை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த, வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியை தமராக்கி, குமாரப்பட்டி, இடையமேலூா், மலம்பட்டி, கோமாளிபட்டி, பா்மா குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் கண்டு களித்தனா்.