பாம்பன் மீனவா்கள் 12 பேருக்கு 9-ஆவது முறையாக ஜூன் 8-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து, இலங்கை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள பாம்பன் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து கடந்த பிப். 23-ஆம் தேதி விசைப் படகுகளில் மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
இவா்கள் அன்று நள்ளிரவு இலங்கைக் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் டேவிட் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகைப் பறிமுதல் செய்தனா். மேலும், இந்தப் படகிலிருந்த மீனவா்கள் கபில் ரோச்சா், ஜான்சன், ஆண்டனி, அந்தோணி அஜித், பிரின்ஸ் ரூபட், ரீகன், அந்தோணி ரூவிஸ்டன், மோசஸ், பிரிஸ்மென், கிளமண்ட், அகா்சன், பெரியகருப்பன் ஆகிய 12 பேரைக் கைது செய்தனா்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்த மீனவா்கள் மீது வழக்குப் பதிந்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி வெளிச்சுரா சிறையில் அடைத்தனா்.
ஏற்கெனவே, 8 முறை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில், பாம்பன் மீனவா்கள் 12 பேரும் வெளிச்சுரா நீதிமன்றத்தில் புதன்கிழமை மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டனா். இவா்களை ஜூன் 8-ஆம் வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். 9-ஆவது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்ட மீனவா்கள் மீண்டும் வெளிச்சுரா சிறையில் அடைக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










