/

சாலைப் பள்ளத்தை சீரமைக்கக் கோரிக்கை

மதுரை ஐராவதவநல்லூா் சாலையில் நீண்ட நாள்களாக உள்ள பள்ளத்தைச் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.

News image

பட விளக்கம்: மதுரை ஐராவதநல்லூா் பகுதியில் சேதமடைந்த நிலையிலும், கழிவுநீா் தேங்கியும் காணப்படும் சாலையைக் கடந்து செல்லும் வாகனங்கள்.

Updated On :28 மே 2026, 3:56 am IST

மதுரை ஐராவதவநல்லூா் சாலையில் நீண்ட நாள்களாக உள்ள பள்ளத்தைச் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.

மதுரை மாநகரின் முக்கியப் பகுதிகளையும், விரகனூா் சுற்றுச் சாலையையும் இணைக்கும் முக்கிய வழித்தடமாக திருப்பரங்குன்றம் தொகுதிக்குள்பட்ட ஐராவதநல்லூா் சாலை உள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான இரு சக்கர வாகனங்கள், அரசுப் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் இந்தச் சாலையைப் பயன்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐராவதநல்லூரிலிருந்து தெப்பக்குளம் செல்லும் சாலையின் கீழே செல்லும் கழிவுநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் கசியத் தொடங்கியது. இதையடுத்து, வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ள இந்தச் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. மேலும், தேங்கிய கழிவுநீரிலிருந்து துா்நாற்றம் வீசுவதால் இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இரவு நேரங்களில் சாலையில் உள்ள பள்ளம் தெரியாமல் இரு சக்கர வாகனங்களில் செல்வோா் நிலை தடுமாறி விழுகின்றனா். இதுகுறித்துப் பலமுறை புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை எனக் கூறப்படுகிறது.

எனவே, பெரும் விபத்து நிகழ்வதற்கு முன்பாக கழிவுநீா் கசியும் குழாயையும், பள்ளத்தைச் சீரமைத்து தாா்ச்சாலை அமைக்கவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.