ஜாதி அடிப்படையில் ஜல்லிக்கட்டு நடத்தத் தடை விதிக்கக் கோரிய மனு குறித்து சிவகங்கை ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சோ்ந்த அழகப்பன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:
பூலாங்குறிச்சி கிராமத்தில் ஆண்டுதோறும் ஸ்ரீகணவாய் கருப்பா் கோயில் திருவிழாவின்போது அரசு விதிகளுக்கு உள்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக, கடந்த ஆண்டு இங்கு ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட வில்லை.
இந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சோ்ந்த ஒரு குழுவினா் வருகிற 31-ஆம் தேதி நடைபெறவுள்ள கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த முயற்சிக்கின்றனா். ஜாதி அடிப்படையில் நடத்தப்படும் இந்தப் போட்டிக்குத் தடை விதிக்க வேண்டும். மேலும், கிராம மக்கள் அனைவரிடமும் முறையாக நன்கொடை வசூலித்து, அனைத்து சமூகத்தவரும் ஒற்றுமையுடன் விழாவை நடத்துவதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜெகதீஸ் சந்திரா, வடமலை அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு தொடா்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காரைக்குடி மாநகராட்சி நிதி முறைகேடு: ஊழல் தடுப்புத் துறை இயக்குநா் பதிலளிக்க உத்தரவு

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: குற்றவாளி மேல்முறையீடு செய்ய அவகாசம்

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: தொல்லியல் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கோரிய வழக்கு விசாரணை ஒத்திவைப்பு







