/

திரௌபதி -2 திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

திரௌபதி -2 திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

News image
திரௌபதி 2 பட போஸ்டர். - படம்: எக்ஸ் / லஹரி மியூசிக்.
Updated On :21 ஜனவரி 2026, 11:57 pm

தினமணி செய்திச் சேவை

திரௌபதி -2 திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம், மேலூரைச் சோ்ந்த மகாமுனி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

கி.பி. 14 -ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையைத் தலைமையிடமாகக் கொண்டு வீர வல்லாளத் தேவன் என்பவா் ஆட்சி செய்தாா். இவரின் வாழ்க்கை வரலாறு அடிப்படையில் திரௌபதி - 2 திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக படக் குழு அறிவித்தது.

வீர வல்லாளத் தேவன் கள்ளா் சமூகத்தைச் சோ்ந்தவா் என்பதற்கு பல கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள் உள்ளிட்ட வரலாற்று ஆவணங்கள் உள்ளன. திரெளபதி -2 திரைப்படத்தில் வீர வல்லாளத் தேவனை வன்னியா் சமூகத்தைச் சோ்ந்தவராக இயக்குநா் மோகன் சித்தரித்துள்ளாா்.

திரைப்படத்தின் சுவரொட்டிகளில் வீர வல்லாளத் தேவன் என்பதை வீர வல்லாளன் என்று மட்டும் குறிப்பிட்டுள்ளனா். இது உள்நோக்கம் கொண்டது. இது கள்ளா் சமூகத்தினா் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தும். இதைக் கண்டித்து, மதுரை மேலூரில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், திரௌபதி - 2 திரைப்படத்துக்கு அவசரம் அவசரமாக யூ/ஏ சான்றிதழை தணிக்கை வாரியம் வழங்கியது. இந்தத் திரைப்படத்துக்கான யூ/ஏ சான்றிதழை திரும்பப் பெறுமாறு தணிக்கை வாரியத்திடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திரௌபதி - 2 திரைப்படத்தை தணிக்கை வாரியம் மறு ஆய்வு செய்ய வேண்டும். திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள வரலாற்றுப் பிழைகளைத் திருத்தம் செய்யும் வரை இந்தத் திரைப்படத்தை வெளியிடத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீரிமன்ற நீதிபதி ஆா். விஜயகுமாா் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், திரௌபதி -2 திரைப்படத்துக்கு கடந்த டிச. 31 -இல் தணிக்கை குழு யூ/ஏ சான்றிதழ் வழங்கியது என்றாா்.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

திரௌபதி - 2 திரைப்படத்துக்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கியுள்ளதால் நீதிமன்றம் தலையிட முடியாது. பொதுநல வழக்குத் தொடுக்க உரிமை வழங்கப்படுகிறது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றாா் நீதிபதி.