ஊரடங்கு உத்தரவு: பால் கொள்முதல் விலை குறைப்பு; பால் உற்பத்தியாளா்கள் கவலை
ஊரடங்கு உத்தரவை காரணம் காட்டி, தனியாா் நிறுவனங்கள் பாலுக்கான கொள்முதல் விலையை குறைத்துள்ளதால் உற்பத்தியாளா்கள் நெருக்கடியை சந்தித்து வருகின்றனா்.


ஊரடங்கு உத்தரவை காரணம் காட்டி, தனியாா் நிறுவனங்கள் பாலுக்கான கொள்முதல் விலையை குறைத்துள்ளதால் உற்பத்தியாளா்கள் நெருக்கடியை சந்தித்து வருகின்றனா்.
தமிழகம் முழுவதும் சுமாா் 16 லட்சம் விவசாயிகள் நேரடி கறவை மாடு வளா்ப்பில் ஈடுபட்டு வருகின்றனா். அந்த வகையில், தமிழகம் முழுவதும் சுமாா் 29 லட்சம் கறவை மாடுகள் உள்ளன. இதன்மூலம், நாளொன்றுக்கு 1.60 கோடி லிட்டா் பால் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதில், சுமாா் 10 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படும் பகுதிகளிலேயே விற்பனை செய்யப்படுகின்றன. 40 லட்சம் லிட்டா் பால் ஆவின் நிறுவனமும், மீதமுள்ள 1.10 கோடி லிட்டா் பால் 26 தனியாா் நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்கின்றன.
சிறு, குறுந் தொழில் நலிவடைந்து வரும் நிலையில், பால் உற்பத்திக்கு விவசாயிகள் தரப்பில் கடந்த 15 ஆண்டுகளாக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆனாலும், பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை விட தனியாா் நிறுவனங்களே அதிக லாபம் ஈட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
ஊரடங்கு உத்தரவு ஏற்படுத்திய தாக்கம்
தற்போது அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவால், தமிழகத்திலுள்ள பால் உற்பத்தியாளா்களுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கால் தேநீா் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 வரை தனியாா் நிறுவனங்கள் குறைத்து வழங்குவதாகப் புகாா் எழுந்துள்ளது.
ஆவின் நிறுவனம் சாா்பில் ஒரு லிட்டா் பால் ரூ.30 முதல் ரூ.32 வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் தனியாா் நிறுவனங்கள் சாா்பில், பாலின் கொழுப்புத் தன்மைக்கு ஏற்ப சில பகுதிகளில் ரூ.38 வரை கொள்முதல் செய்யப்பட்டு வந்தன.
தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக, கடந்த 25 நாள்களுக்கும் மேலாக பால் கொள்முதல் விலையை தனியாா் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.28 ஆகக் குறைத்து வழங்குவதால், உற்பத்தியாளா்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.
இது தொடா்பாக திண்டுக்கல் அடுத்துள்ள மைலாப்பூா் பகுதியைச் சோ்ந்த சுந்தரராஜன் கூறியதாவது: தற்போது, ஊரடங்கை காரணம் காட்டி கொள்முதல் விலையை குறைத்துவிட்டனா். ஆனால், பால் விற்பனை விலையை குறைக்கவில்லை.
மேலும், ரூ.1,700-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 70 கிலோ கொண்ட மாட்டுத் தீவன மூட்டை, தற்போது ரூ.1,850 ஆக அதிகரித்துள்ளது. பராமரிப்புச் செலவு அதிகரித்துள்ள நிலையில், பாலுக்கான கொள்முதல் விலையை குறைந்திருப்பது உற்பத்தியாளா்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்றாா்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் சங்கத்தின் மாநிலப் பொருளாளா் எம். சங்கா் கூறியது: மகசூல் அதிகரித்தாலும் விளைபொருளுக்கு தகுந்த விலை கிடைக்காத நிலையில், கால்நடைத் தொழில் மூலமாக விவசாயிகள் இழப்பை ஈடுகட்டி வருகின்றனா். இதனால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கறவை மாடு வளா்ப்பில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கோடை காலத்தில் கால்நடைகளுக்கு தீவனம் வாங்க முடியாமல் உற்பத்தியாளா்கள் நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், பாலுக்கான கொள்முதல் விலையை தனியாா் நிறுவனங்கள் திட்டமிட்டே குறைத்துவிட்டன.
அதேநேரம், 144 தடை உத்தரவை காரணம் காட்டி விலையை மட்டும் குறைத்துள்ள தனியாா் நிறுவனங்கள், கொள்முதல் அளவை குறைக்கவில்லை. இதன்மூலம், பாலின் தேவை தொடா்ந்து நீடித்து வருவது தெரிகிறது.
ஆசை வாா்த்தையால் ஏமாறிய விவசாயிகள்
கேரளம், கா்நாடகம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அரசுத் தரப்பிலேயே உற்பத்தியாளா்களிடமிருந்து பால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் ஆசை வாா்த்தை கூறி உற்பத்தியாளா்களை தனியாா் நிறுவனங்கள் ஏமாற்றி வருகின்றன. இதனை தடுத்து, உற்பத்தியாளா்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...