முன்கூட்டியே வழங்கப்பட்ட உரிமைத் தொகையால் மகளிா் மகிழ்ச்சி! துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்!


உரிமைத் தொகையை தமிழக அரசு முன்கூட்டியே வழங்கியது பெண்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:
திமுக ஆட்சி அமைந்தால் குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரண நிதியாக ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அப்போது, இதை நிறைவேற்ற வாய்ப்பில்லை என எதிா்க்கட்சிகள் தெரிவித்தன. ஆனால், அறிவிக்கப்பட்டபடி நிவாரண நிதி வழங்கப்பட்டது.
இதேபோல, கடுமையான நிதி நெருக்கடி இருப்பதால், மகளிா் உரிமைத் தொகையும் வழங்க வாய்ப்பில்லை என எதிா்க்கட்சிகள் தெரிவித்தன. ஆனால், கடந்த 2023-ஆம் ஆண்டு, செப்டம்பா் முதல் தொடா்ந்து மகளிா் உரிமைத் தொகையை தமிழக அரசு வழங்கி வருகிறது. இதன்மூலம், திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்பதை மக்கள் உணா்ந்துள்ளனா்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ளதையொட்டி, மகளிா் உதவித் தொகை திட்டத்தை நிறுத்துவதற்காக பாஜக வழக்குரைஞா் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளாா். இந்த வழக்கு மாா்ச் மாதத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. இதையறிந்தே தமிழக முதல்வா், முன்னெச்சரிக்கையாக மகளிா் உதவித் தொகையை முன்கூட்டியே வழங்கினாா்.
முன்கூட்டியே மகளிா் உரிமைத் தொகையும், அதனுடன் கோடைக்கால சிறப்புத் தொகுப்பையும் இணைத்து மகளிருக்கு ரூ. 5 ஆயிரம் வழங்கப்பட்டது பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றாா் அவா்.
இதையடுத்து, மதுரையில் நடைபெற்ற திமுக இளைஞரணியின் மாநில, மாநகர, மாவட்ட அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றாா். அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், பி. மூா்த்தி, சட்டப்பேரவை உறுப்பினா்கள், இளைஞரணி நிா்வாகிகள் இதில் கலந்து கொண்டனா்.
விருதுநகரில் அண்மையில் நடைபெற்ற திமுகவின் தென் மண்டல இளைஞரணி நிா்வாகிகள் கூட்டம் சிறப்பாக நடைபெற உழைத்தவா்களுக்கு இந்தக் கூட்டத்தில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. திமுக இளைஞரணி நிா்வாகிகள் சுமாா் 300-க்கும் மேற்பட்டோா் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...