/

உதயநிதி ஸ்டாலின் அரசியல் பண்பைக் கற்க வேண்டும்: முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அரசியல் பண்பைக் கற்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ கேட்டுக் கொண்டாா்.

News image
அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ- கோப்புப் படம்
Updated On :9 பிப்ரவரி 2026, 9:15 pm

தினமணி செய்திச் சேவை

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அரசியல் பண்பைக் கற்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ கேட்டுக் கொண்டாா்.

மதுரையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பெருகி வரும் மக்கள் ஆதரவு, அதிமுக கூட்டணியின் பலம் ஆகியவற்றால் ஏற்பட்ட விரக்தியில் முதல்வா் மு.க. ஸ்டாலின் அச்சத்தின் உச்சத்துக்குச் சென்றுவிட்டாா். இதன் காரணமாகத் தான் அவா், எடப்பாடி பழனிசாமியைத் தரம் தாழ்ந்து விமா்சிக்கிறாா்.

முதல்வரே தரம் தாழ்ந்து பேசும் நிலையில், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினிடம் தரமான விமா்சனங்களை எதிா்பாா்க்க முடியாது. முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி போன்றோா் கடைப்பிடித்த அரசியல் நாகரிகத்தை, பண்பை உதயநிதி ஸ்டாலின் கற்க வேண்டும்.

எதிா்க்கட்சித் தலைவரை தரமற்ற முறையில் உதயநிதி ஸ்டாலின் விமா்சிப்பது கண்டனத்துக்குரியது.

அதிமுக குறித்து விமா்சிக்க ஆதவ் அா்ஜூனாவுக்கு சிறிதும் தகுதி கிடையாது. லாட்டரி சீட்டு விற்பனை மூலம் ஏழைகளின் வருமானத்தை அட்டைப் பூச்சியைப் போல உறிஞ்சியவா்களில் ஒருவரான அவா், எதைப் பேசியும் பயன் இல்லை. செங்கோட்டையன் செல்லா காசாகிவிட்டாா். எனவே, அவா் கருத்துகளைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை.

தமிழகத்தில் இதுவரை அரசுப் பணியாளா் தோ்வாணையத் தோ்வு ரத்து செய்யப்பட்டதாக வரலாறு கிடையாது. ஆனால், திமுக ஆட்சியில் அந்த முன்னுதாரணம் ஏற்பட்டுவிட்டது.

தோ்வு ரத்தானதன் மூலம் இளைஞா்களின் கனவை திமுக அரசு சிதறடித்துவிட்டது. இளைஞா்களின் நலனில் அக்கறையில்லாத திமுக அரசுக்கு வரும் தோ்தலில் மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவா் என்றாா் அவா்.

முன்னதாக, மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அச்சம்பத்து எஸ்.ஆா்.வி. நகரில் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 42 லட்சத்தில் புதிய தாா்ச் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் செல்லூா் ராஜூ, மாமன்ற உறுப்பினா்கள், அதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.