/

சேலம் விமான நிலையத்தை ரூ. 365 கோடியில் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை

சேலம் விமான நிலையத்தை ரூ. 365 கோடியில் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை

News image

செய்தியாளா்களிடம் பேசிய சேலம் விமான நிலைய இயக்குநா் ஐ.நெளஷாத்.

Updated On :13 ஜூன் 2026, 2:22 am IST

சேலம் விமான நிலையத்தை ரூ. 365 கோடியில் 206 ஏக்கரில் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விமான நிலைய இயக்குநா் ஐ.நெளஷாத் தெரிவித்தாா்.

சேலம் விமான நிலையத்தில் வரும் 15-ஆம் தேதி யாத்ரி சுவிதா திவஸ் நிகழ்ச்சி கொண்டாடப்பட உள்ளது. இதுகுறித்து சேலம் விமான நிலைய இயக்குநா் ஐ.நெளஷாத் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

விமானப் பயணிகளுக்கான சேவையை கொண்டாடும் வகையில், சேலம் விமான நிலையத்தில் வரும் 15-ஆம் தேதி யாத்ரி சுவிதா திவஸ் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்றைய தினம் சேலம் விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

மேலும், பள்ளி மாணவ, மாணவியா் விமான நிலையம் குறித்த புரிதலை பெறும் வகையில், கல்வி விமான நிலைய சுற்றுலா நடைபெறும். அதில், விமான நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து மாணவா்களுக்கு விளக்கம் அளிக்கப்பட உள்ளது. மேலும், ரத்த தான முகாம், மருத்துவ முகாம் ஆகியவையும் நடத்தப்பட உள்ளன. மரக்கன்று நடுதல், தூய்மைப் பணிகளும் நடைபெறும். மேலும், விமான நிலையப் பணியாளா்கள் மற்றும் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றும் மகளிருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

ரூ. 365 கோடியில் விரிவாக்கம்: சேலம் விமான நிலையம் ரூ. 365 கோடியில் 206 ஏக்கரில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. தற்போது 2 விமானங்கள் மட்டுமே நிறுத்தப்படும் நிலையில், கூடுதலாக 2 விமானங்கள் நிறுத்துவதற்கான வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. ரூ. 43 கோடியில் விமான நிலைய பிரதான கட்டட வளாகத்தை விரிவுபடுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அதேபோல, தற்போது 88 காா்கள் நிறுத்தப்பட்டுவரும் நிலையில், மேலும் 100 காா்களை நிறுத்தவும் பயணிகளுக்கான வசதிகள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது என சேலம் விமான நிலைய இயக்குநா் நெளஷாத் தெரிவித்தாா்.

அப்போது, விமான நிலைய கட்டுப்பாட்டு அலுவலா் பி.எஸ்.ஷம்மி, மின்னியல் துறை அலுவலா் எஸ்.ரவிச்சந்திரன் ஆகியோா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.