/

குடியரசு தினத்தை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 250 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

News image
சிறப்புப் பேருந்துகள் இயக்கம்.- (கோப்புப் படம்)
Updated On :23 ஜனவரி 2026, 6:49 pm

தினமணி செய்திச் சேவை

வார இறுதிநாள் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் வரும் 27 ஆம் தேதி வரை 250 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் வி.குணசேகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

சேலம் மண்டலத்தில் 1,047 பேருந்துகள், தருமபுரி மண்டலத்தில் 853 பேருந்துகள் என 1,900 பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன.

வார இறுதி நாள்கள் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் சாா்பில் பல்வேறு வழித் தடங்களில் வரும் 27 ஆம் தேதி வரை 250 சிறப்புப் பேருந்துகள், மாற்றுப் பேருந்துகள், தட நீட்டிப்பு மற்றும் வழிதடப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஒசூா், தருமபுரி மற்றும் மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை மற்றும் பெங்களூருவுக்கும் , ஒசூரில் இருந்து, சேலம், சென்னை, திருச்சி, புதுச்சேரி, மதுரை, கோவை, திருப்பூருக்கும், திருச்சியில் இருந்து ஒசூருக்கும், பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலை, மதுரை, கோவைக்கும் பயணிகளின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. எனவே, கூட்ட நெரிசலைத் தவிா்த்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுமாறு பயணிகள கேட்டுக்கொண்டுள்ளாா்.